இப்பகுதியில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் நடப்பது வழக்கமானது என்றும், இது குறித்து பொலிஸாருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தும் அவர்கள் வருவதற்குள் பந்தயக்காரர்கள் தப்பிச் சென்றுவிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நீர்கொழும்பு – மினுவாங்கொடை வீதியில் பொலவலான பகுதியில் ஜூலை 29ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் 18, 19 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள கொள்கலன் வாகனத்தின் உரிமையாளர், விபத்தில் சிக்கிய இளைஞர்கள் அந்த வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் (Racing) ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
விபத்தின் போது இரு மோட்டார் சைக்கிள்களும், சுமார் 160 முதல் 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்ததாக உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் சுமார் 250 மீட்டர் தூரம் வரை சென்றதாகவும், பிரேக் போடுவதற்குக்கூட அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது உதவியாளர், போக்குவரத்தை நிறுத்தி வீதியைச் சீர் செய்த பின்னரே கொள்கலன் வாகனம் திருப்பப்பட்டதாகவும், இதற்குரிய ஆதாரங்கள் CCTV காட்சிகளில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வீதி நேராக இருந்ததால் பார்வைத்தடை எதுவும் இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இப்பகுதியில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் நடப்பது வழக்கமானது என்றும், இது குறித்து பொலிஸாருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தும் அவர்கள் வருவதற்குள் பந்தயக்காரர்கள் தப்பிச் சென்றுவிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
விபத்தின் பின்னர் கொள்கலன் வாகனத்துக்குத் தீ வைத்தது உள்ளூர் மக்கள் அல்ல என்றும், வெளியிலிருந்து வந்தவர்களே வாகனத்தை சேதப்படுத்தி தீயிட்டதாகவும் உரிமையாளர் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் அங்கிருந்த பொலிஸாரால் இந்தத் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீ வைப்பு குற்றச்சாட்டில் இதுவரை மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் மேலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விபத்துச் சம்பத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி (CCTV) காட்சி – https://www.facebook.com/share/v/1FNbaGMNnt/


