
எம். எச். எம். சியாஜ்
கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், சட்டவிரோதமாகக் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்வதற்காகக் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 44 மூட்டைகளைக் கொண்ட கடல் சங்குகளுடன், சந்தேக நபர் ஒருவர் வியாழக்கிழமை (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாசவின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டு வரும், எஸ். எஸ். பெர்னாண்டோ தலைமையிலான விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட சங்குகளின் பெறுமதி பல இலட்சம் ரூபாய் ஆகும். இதில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட சங்குகள் காணப்படுவதுடன், இதன் பிரதான உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் விசேட பொலிஸ் குழுவின் தலைமை அதிகாரி எஸ். எஸ். பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

