NRI-களுக்கு வேட்டு வைத்த சிங்கப்பூர் அரசு.. மோடி அரசு கண்ட கனவில் ஓட்டை..!!
இந்திய அன்னிய செலவணியை காப்பாற்றி வரும் FCNR வைப்பு நிதிக்கு மிகப்பெரிய வேட்டு வைத்துள்ளது சிங்கப்பூர் அரசு. கடந்த 2 வாரங்களாக சிங்கப்பூரில் இருக்கும் என்ஆர்ஐ-கள் மற்றும் முதலீட்டாளர்கள், வங்கியாளர்கள் என நிதி சந்தையை சேர்ந்த அனைவரும் புலம்பும் விஷயமாக உள்ளது 10% withholding tax தான்.
இந்தியாவில் அன்னிய செலவாணி இருப்பு வெளியேறி வந்த நிலையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது.

இந்த நிலையில் ஆர்பிஐ ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்த FCNR வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தை அதிகரிக்க முடிவு செய்தது. டாலர் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காக கரன்சி ரிஸ்க்-ல் ஆர்பிஐ புதிய சலுகை கொடுத்த காரணத்தால் FCNR வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 3.5 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதம் வரையில் அதிகரித்தது. இதனால் உலக நாடுகளில் இருந்து டாலர் முதலீடுகள் குவிய துவங்கியது. ஆனால் சிங்கப்பூர் அரசு இதற்கு பெரிய செக் வைத்துள்ளது.
சிங்கப்பூர் அரசு..
ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்புக்கு பின்பு சிங்கப்பூரில் இருக்கும் பல இந்தியர்கள், முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தியாவில் டாலர் முதலீடுகளை செய்ய துவங்கியது. இதேவேளையில் சில வங்கிகள் leveraged FCNR என்னும் சிறப்பு திட்டத்தை அறிவித்து முதலீட்டாளர்களுக்கு கூடுதல் லாபத்தை அளிக்க உத்தரவாதம் கொடுத்தது.
ஆனால் சிங்கப்பூரின் வரி துறையான IRAS இந்திய வங்கிகள் கொடுக்கும்ம் இத்தகைய சிறப்பு FCNR வைப்பு நிதிக்கு 10 சதவீதம் வரி விதித்த காரணத்தால் சிங்கப்பூரில் இருந்து வரும் மொத்த டாலர் முதலீடுகளும் தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
FCNR திட்டத்தில் என்ன பிரச்சனை..
FCNR வைப்பு நிதி என்பது வெளிநாட்டில் இருக்கும் என்ஆர்ஐகள் தங்களுடைய பணத்தை FCNR வைப்பு நிதியாக செய்யும் போது, டாலர் முதலீடு டாலராகவே இருக்கும், யூரோ முதலீடு யூரோவாகவே இருக்கும். இதற்கு வட்டி வருமானம் கிடைக்கும்.
சாதாரண வைப்பு நிதியில் பணத்தை போடும் போது, டாலர் முதலீடு ரூபாயாக மாற்றி வைப்பு வைக்கப்படும். இத்தகைய சூழ்நிலையில் ரூபாய் மதிப்பு சரிந்தால் மொத்த முதலீடின் மதிப்பும் குறைந்துவிடும்.
சரி leveraged FCNR என்றால் என்ன..?
சில வங்கிகள் தனது வர்த்தகத்தை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்கவும் இத்தகைய leveraged FCNR திட்டத்தை பரிந்துரை செய்கிறது. சரி உதாரணமாக சிங்கப்பூரில் கடந்த 10 வருடமாக பணியாற்றி வரும் கிஷோர் 1,00,000 டாலர் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம்.
Leveraged FCNR திட்டத்தின் கீழ் கிஷோரின் வைப்பு நிதிக்கு 9-19 மடங்கு அதிக கடன் கொடுத்து வைப்பு செய்ய வாய்ப்பு அளிக்கும். அதாவது வங்கி 9,00,000 டாலரை கடனாக அளிக்கும். இதன் மூலம் கிஷோர் 10,00,000 டாலர் தொகையை FCNR திட்டத்தின் கீழ் முதலீடு செய்து லாபம் பெறலாம்.
இப்போது வங்கிகள் 9,00,000 டாலர் கடனுக்கான வட்டி தொகையை கழித்துக்கொண்டு மீதமுள்ள 1 லட்சம் டாலருக்கான வட்டி வருமானத்தை சேர்த்து அளிக்கும். இதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால் பலருக்கும் இத்தகைய leveraged FCNR திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.
சிங்கப்பூர் அரசு சொல்வது என்ன..?
சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் இருக்கும் ஒரு வங்கிக்கு வட்டி செலுத்தினால், இந்த வட்டி தொகை சிங்கப்பூரில் இருந்து பெறப்பட்ட வருமானமாகவே கருதப்படும். இதனால் சிங்கப்பூர் அரசு செலுத்தப்பட்ட வட்டி தொகை மீது 10% Withholding Tax விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு TDS போன்று கணக்கிட்டு கொள்ள வேண்டும்.
இதனால் என்ன பிரச்சனை..
Leveraged FCNR திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 7 சதவீதம் வரையிலான வட்டி லாபம் கிடைக்கிறது எனில், கடனுக்கான வட்டி 6.5 சதவீதமெனில் லாபம் 0.5 சதவீதம் லாபம்.
இந்த கடனுக்கான வட்டி தொகையில் 10 சதவீதம் வரி செலுத்தப்பட வேண்டுமெனில் மொத்த லாபத்தையும் இழக்க நேரிடும் அல்லது மிகவும் சொற்பமான லாபம் மட்டுமே கிடைக்கக்கூடும். சில நேரத்தில் இருப்பையும் இழக்கலாம். இதனால் சிங்கப்பூரில் இருந்து வரும் FCNR வைப்பு நிதிக்கு செக் வைக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய leveraged FCNR திட்டத்தில் வங்கிகள் வைப்பு நிதி – கடனுக்கான வட்டி தொகை கழித்த பின்பே டெபாசிட் செய்யும். உதாரணமாக 10 லட்சம் டாலருக்கான வைப்பு நிதிக்கு வட்டி வருமானம் 70000 டாலர், 9 லட்சம் டாலர் கடனுக்கான வட்டித்தொகை 60000 டாலர்.. இவற்றை கழித்தால் 10000 டாலர் வைப்பு வைக்கப்படும். இதுவே சாதாரண FCNR திட்டத்தில் முதலீடு செய்தால் 1 லட்சம் டாலருக்கு 7000 டாலர் மட்டுமே லாபமாக கிடைத்திருக்கும். தற்போது கூடுதலாக 3000 டாலர் லாபமாக கிடைத்துள்ளது, இதுவே leveraged FCNR திட்டத்தில் இருக்கும் பலன்.
ஆனால் இந்த அனைத்து பேமெண்ட்டையும் சிங்கப்பூரில் இருக்கும் இந்திய வங்கி கிளையில் செய்தால் withholding tax நீக்கப்படும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
