Last Updated:
சபரிமலை அய்யப்பன் கோயிலில் நெய் முறைகேடு: மில்மா நெய்யை மாற்றி, தரமற்ற தமிழ்நாடு நெய் கலப்படம். 1.77 லட்சம் லிட்டர் நெய்யில் மோசடி. கேரள அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு அனுப்பப்பட்ட நெய்யில் தமிழ்நாட்டு நெய்யைக் கலந்து முறைகேடுகள் நடந்துள்ளது, பால்வள மேம்பாட்டுத் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சபரிமலை சந்நிதானத்திற்கு ஒன்றரை லட்சம் லிட்டருக்கும் அதிகமான தரம் குறைந்த நெய் விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து நடந்த விசாரணையில், பத்தனம்திட்டாவில் இருந்து பம்பைக்கு நெய்யைக் கொண்டு செல்லும் வழியில், உயர்தர மில்மா நெய்யை மாற்றிவிட்டு, தரம் குறைந்த தமிழ்நாடு நெய்யைக் கலப்படம் செய்தது தெரியவந்தது.
ஒரு லட்சத்து 77 ஆயிரம் லிட்டர் நெய் பாக்கெட்டுகளில் சுமார் 35 பேட்ச் எண்கள் இருக்க வேண்டிய இடத்தில், வெறும் 6 பேட்ச் எண்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. டெண்டர் விதிமுறைகளை மாற்றி குறிப்பிட்ட ஒரு நபருக்கு சாதகமாக ஒப்பந்தம் வழங்க அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் மூலம், உணவு பாதுகாப்புத் துறையின் பரிசோதனையில் இருந்து தப்பி தரமற்ற நெய் கொண்டு செல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. சபரிமலைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய கேரளா கூட்டுறவு பால் நிறுவனமான மில்மாவின் நெய்யை, வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்று, கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியதும் அம்பலமானது.
இந்த முறைகேட்டில் மில்மா மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பைக் கண்டறிந்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. முறைகேட்டைத் தொடர்ந்து மில்மா திருவனந்தபுரம் மண்டல யூனியன் உடனடியாகக் கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகப் பொறுப்பை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


