உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படாமையானது ஜனாதிபதி ஆளமைச் சட்டத்தை வெளிப்படையாக மீறியுள்ள செயலாகக் கருதப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர், சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அரசியலமைப்பை மீறுவது என்பது மிகக் கடுமையான குற்றச்சாட்டு எனவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிகளை நிரப்பாமல் வைத்திருப்பது ஒருவகையான ஊழலாகும் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
யாருக்கும் தெரியாமல் அமைச்சரவையில் யோசனையொன்றைச் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும், இந்த அவசரம் எதற்காக என்று தனக்குப் புரியவில்லை எனவும் அமரசூரிய தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை உயர்த்தும் யோசனையைக் கொண்டுவருவதற்கு முன்னர் தமது பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏனைய அரசாங்கங்கள் ஊழல் நிறைந்தவை என்ற அடிப்படையில் தான் மக்கள் இந்த அரசாங்கத்தைத் தெரிவு செய்தனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், யார் எதை எதிர்த்தாலும் அரசாங்கம் இந்த யோசனையை நடைமுறைப்படுத்த முற்படுகிறதென்றால், இதன் பின்னால் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இலாபத்தை அடைந்துகொள்ளும் நோக்கம் இருக்கக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

