கோலாலம்பூர்:
இன்று கோபெங், ‘கெபுன் பாக் வான்’ அருகே உள்ள சுங்கை கம்பார் (Sungai Kampar) ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
உயிரிழந்த சிறுவன் அமீருல் டேனிஷ் அஃபிசால் (Amirul Danish Afizal) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபாரோட்ஸி நூர் அகமத் கூறுகையில், மதியம் 1:45 மணியளவில் இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்தது.
கோபெங் தீயணைப்பு நிலைய வீரர்களும், அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு அகாடமியின் (FRAM Tronoh) அதிகாரிகளும் இணைந்து உடனடியாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
சிறுவன் ஆற்றில் குதித்துக் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 15 முதல் 20 மீட்டர் தொலைவில், 10 நிமிடங்களுக்குள் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
மீட்புக் குழுவினர் சிறுவனை ஆற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தவுடன், மருத்துவ உதவி வரும் வரை சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து முதலுதவியும் சி.பி.ஆர் (CPR) சுவாசப் பயிற்சியும் வழங்கினர்.
இருப்பினும், சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினர் சிறுவனைப் பரிசோதித்து, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிசெய்தனர்.
சிறுவனின் உடல் மேல் நடவடிக்கைக்காகப் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாலை 4:18 மணியளவில் இமீட்பு நடவடிக்கை நிறைவுபெற்றது.



