உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசியலமைப்புத் திருத்த முடிவைக் கைவிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.
அனைத்து நீதிபதிகளுக்கும் பொருந்தும் வகையிலும், புதிய அரசியலமைப்பின் ஒரு பகுதியாகவும் கொண்டுவரப்பட்டால் மட்டுமே ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதை ஏற்க முடியும் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அவசரத் திருத்தம் நீதித்துறைக்கு நிறைவேற்று அதிகாரம் அளிக்கும் சலுகையாகவோ அல்லது தலையீடாகவோ பார்க்கப்பட்டு, நீதித்துறையின் சுயாதீனத்தையும் பொதுமக்கள் நம்பிக்கையையும் பாதிக்கும் எனச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
குறுகிய நோக்கம் கொண்ட இத்தகைய சீர்திருத்தங்கள் ஜனநாயகக் கொள்கைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு மீதான மரியாதையைப் பலவீனப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீதித்துறைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்த முயற்சியை ஜனாதிபதி உடனடியாக மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

