Last Updated:
வைபவ்வின் முதிர்ச்சியும், போட்டியைப் புரிந்துகொள்ளும் திறனும் கடந்த 6 மாதங்களில் கணிசமாகப் உயர்ந்துள்ளன.
பேட்டிங்கில் அனைத்து வகையான சாதனைகளையும் வைபவ் சூர்யவன்ஷி முறியடிப்பார் என்று இந்திய அணியின் சிறப்பு பயிற்சியாளர் லக்ஸ்மன் பாராட்டியுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் 15 வயதே ஆன இளம் பேட்டிங் நட்சத்திரமான வைபவ் சூரியவன்ஷி (Vaibhav Sooryavanshi), தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ‘தொடர் நாயகன்’ விருதை வென்றுள்ளார். இவரை இந்திய டி20 அணியின் பயிற்சியாளர் வி.வி.எஸ். லக்ஷ்மண் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெறும் 18 பந்துகளில் அரைசதமடித்து அசத்திய சூரியவன்ஷி, மூன்றாவது போட்டியில் 81 ரன்கள் விளாசி இந்திய அணி 3-0 எனத் தொடரைக் கைப்பற்ற முக்கியக் காரணமாக அமைந்தார். சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் போதிய ரன்கள் சேர்க்க முடியாமல் தடுமாறியபோதிலும், அதிலிருந்து விரைவாகக் கற்றுக்கொண்டு ஜிம்பாப்வே தொடரில் தனது திறமையை அவர் நிரூபித்துள்ளார்.
வைபவ் சூரியவன்ஷியின் ஆட்டம் குறித்துப் பேசிய பயிற்சியாளர் வி.வி.எஸ். லக்ஷ்மண், “வைபவ்வின் முதிர்ச்சியும், போட்டியைப் புரிந்துகொள்ளும் திறனும் கடந்த 6 மாதங்களில் கணிசமாகப் உயர்ந்துள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்குப் பிறகும் தனது ஆட்டத்தை அவரே சுய ஆய்வு செய்து கொள்கிறார்.
இங்கிலாந்து தொடரில் அவர் தடுமாறியது பற்றி எனக்குக் கவலையில்லை. சர்வதேச அளவில் உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் திறன் அவருக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், போட்டியில் பவுண்டரி எல்லையில் டைவ் அடித்து பந்தைப் பிடிக்க முயன்றபோது லேசான காயமடைந்த நிலையிலும், களத்திலேயே தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற அவருடைய முனைப்பு தங்களை நெகிழ வைத்ததாகக் குறிப்பிட்ட லக்ஷ்மண், அவரது உடல்தகுதியை மேலும் மேம்படுத்துவதிலேயே இனி கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.


