Last Updated:
கபடி வீரராகத் தொடங்கி காமன்வெல்த்தில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் கோவில்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன்.
தாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டியின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி – பேச்சியம்மாள் தம்பதியின் இளைய மகன் ராஜா. பளுதூக்குதல் வீரரான ராஜாவின் தந்தை முத்துப்பாண்டி சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். அவரது தாயார் பேச்சியம்மாள் தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய மூத்த சகோதரர் சுரேஷ்குமாரும் பளுதூக்கும் வீரர். அவர் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
தொடக்கத்தில் கபடி விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வந்த ராஜாவும், அவரது சகோதரர் சுரேஷ்குமாரும் உடல் வலிமை பெற வேண்டும் என்பதற்காக சங்கரலிங்கபுரத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் உடற்பயிற்சியில் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து அங்குள்ள பயிற்சியாளர்கள் இருவரையும் பளுதூக்கும் விளையாட்டிற்கு தயார் செய்துள்ளனர்.
ராஜா, தனது பள்ளிக் காலத்தில் இருந்தே பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைக்க அவருக்கு மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் இடம் கிடைத்தது. அங்கு பயிற்சி பெற்று மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் முத்திரை பதித்ததால் பெரம்பூர் ரயில்வேயில் அவருக்கு பணி கிடைத்தது.
2018-இல் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று ஆறாவது இடம் பிடித்தார். 2022 இல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் உடல்நல பாதிப்பு காரணமாக பங்கேற்கவில்லை. இந்த நிலையில் தான் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று பெற்றோரின் கடின உழைப்பிற்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
கோவில்பட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உடற்பயிற்சி கூடம் அமைத்தால் இன்னும் ஏராளமான வீரர்களை உருவாக்க முடியும் என்று ராஜாவுக்கு பளுதூக்குதலில் முதல் முறையாக பயிற்சியாளராக இருந்த சொர்ணமுத்து தெரிவித்துள்ளார்.
கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் சொற்ப ஊதியத்தையும் தனது மகனின் எதிர்காலத்திற்காக செலவு செய்த முத்துப்பாண்டி-பேச்சியம்மாள் தம்பதியினர் சொந்த வீடு கூட இல்லாமல் இன்றைக்கும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகின்றனர். அவரது தாய் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்துவருகிறார். மகன் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக 2 ஷிப்ட் வேலை பார்த்து மகனின் லட்சியத்திற்காக உழைத்திருக்கிறார்.
ரெண்டு ஷிப்ட் வேலை பார்த்து என் மகன் பயிற்சிக்கு தேவையானதை வாங்கி கொடுத்தேன் – காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் ராஜாவின் தாய் பேச்சியம்மாள் நெகிழ்ச்சியுடன் பேட்டி #Rajamuthupandi #Commonwelth #silvermedal #65kgweightlift… pic.twitter.com/CtYnFHzBRl
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 27, 2026
இந்த நிலையில் தான் வெள்ளி பதக்கம் வென்றுள்ள ராஜாவிற்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கமளிப்பதுடன், உதவிக்கரம் நீட்டினால், கண்டிப்பாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


