Last Updated:
காமன்வெல்த் 2026 பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் 286 கிலோ எடையைத் தூக்கி அசத்தினார்.
காமன்வெல்த் பளுத்தூக்கும் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 123 பேர் கொண்ட அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகின்றனர்.
இதில் ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி பங்கேற்றார். ஸ்னாட்ச் பிரிவில் 126 கிலோ எடையைத் தூக்குவதற்கான தனது முதல் முயற்சியில் தோல்வி அடைந்த அவர், தனது இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றார்.
அதன்பின் 129 கிலோ எடையைத் தூக்க மேற்கொண்ட இறுதி முயற்சி தோல்வி அடைந்ததால் ஸ்னாட்ச் பிரிவில் அவரது சிறந்த செயல்பாடாக 126 கிலோ பதிவானது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில், முதல் முயற்சியில் 158 கிலோவைத் தூக்கத் தவறினாலும், மேலும் 2 கிலோ எடையைச் சேர்த்து இரண்டாவது முயற்சியில் வியக்கத்தக்க வகையில் 160 கிலோவைத் தூக்கினார். இதனால் ஒட்டுமொத்தமாக 286 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை தட்டித் தூக்கினார்.
காமன்வெல்த் போட்டியின் சாதனையாக 299 கிலோ எடையைத் தூக்கிய மலேசியாவின் அஸ்னில் பிடின் தங்கப் பதக்கத்தை வென்றார். 2019 காமன்வெல்த் போட்டியில் முழங்கை தசைநார் கிழிந்ததால் ராஜா முத்துப்பாண்டிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மீண்டு வந்து 2021 தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அவர், மூன்றாம் இடம்பிடித்தததால் 2022 காமன்வெல்த் விளையாடும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


