ரஷ்யாவுக்கு ரூ.1.38 லட்சம் கோடி பணத்தை அனுப்பிய இந்தியா.. அதுவும் 3 மாதத்தில்.. எதற்காக தெரியுமா?
இந்தியா – ரஷ்யா மத்தியிலான நட்புறவு என்பது இன்று, நேற்று துவங்கியது இல்லை, சோவியத் காலத்தில் இருந்து ஆரம்பமான இந்த நட்பு, இந்தியா பல இக்கட்டான நிலையில் இருந்த போது துணை நின்றுள்ளது. கொரோனா தொற்றுக்கு பின்பு ரஷ்யா உடன் இந்த நட்பு மிகப்பெரிய வர்த்தக ஆதாரமாகவும் மாறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கு மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக ரஷ்யா மாறியிருக்கிறது. இதைவிட முக்கியமாக ரஷ்யா இந்தியாவுக்காக ஸ்பெஷல் சலுகை கொடுத்துள்ளது, அதாவது ரஷ்யாவிடம் வாங்கும் கச்சா எண்ணெய்க்கு இந்தியா டாலரில் பணம் செலுத்தாமல் ரூபாயில் செலுத்த அனுமதி கொடுத்துள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 96 ரூபாயை கடந்திருக்கும் வேளையில் மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து சுமார் 15 பில்லியன் டாலர் அதாவது 1.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெயை வாங்கியுள்ளது. இதுவே டிசம்பர் 2025 முதல் பிப்ரவரி 2026 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா 42,506 கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் மட்டுமே வாங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா அதிகளவிலான அன்னிய செலாவணியை சேமித்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் போர் துவங்கிய பின்பு ஹார்முஸ் நீரிணை வழியாக வரும் கச்சா எண்ணெய் குறைந்த நிலையிலும், அமெரிக்கா ரஷ்யா மீதான கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ள காரணத்தாலும் இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. இதன் வாயிலாக மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதத்தில் நாட்டின் மொத்த இறக்குமதியில் சுமார் 7.1 சதவீகம் ரஷ்யாவில் இருந்து வந்துள்ளது.
ரஷ்யாவின் டிஸ்கவுன்ட் விலையிலான கச்சா எண்ணெய், ரூபாய் மதிப்பிலான பேமெண்ட் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதேவேளையில் ஹார்முஸ் நீரிணை மூலம் எரிபொருள் விலை 50-60 சதவீதம் வரையில் உயர்ந்த நிலையில், இந்தியாவில் மிகவும் குறைவான அளவிலான உயர்வை மட்டுமே பதிவாகியுள்ளது.
இந்தியா தனது தேவையில் சுமார் 40 சதவீத கச்சா எண்ணெய் தேவையை ஹார்முஸ் வழியாக பூர்த்தி செய்து வருகிறது. ஈரான் போரால் இவ்வழித்தடத்தில் வரும் சப்ளை பெரிய அளவில் குறைந்திருக்கும் வேளையில் ரஷ்யாவின் சப்ளை பெரிய அளவில் உதவியுள்ளது.
