Last Updated:
வாகனங்களைக் கழுவுவது, தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது போன்ற நடவடிக்கைகளுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கார்ப்பஸ் கிறிஸ்டி (Corpus Christi) என்ற நகரம், நவீன அமெரிக்க வரலாற்றிலேயே குடிநீர் முற்றிலும் தீர்ந்துபோகும் முதல் ‘டே ஜீரோ’ (Day Zero) நகரமாக மாறும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் இந்த நகரில், இன்னும் ஒரு ஆண்டிற்கு மட்டுமே பயன்படுத்துவதற்கான நீர் இருப்பு உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொடர் வறட்சி மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு அப்பால், இங்குள்ள கட்டுப்பாடற்ற தொழில்வளர்ச்சியே இந்த நீர் நெருக்கடிக்கு முதன்மை காரணமாகும். இங்கு அமைந்துள்ள பெரிய பெட்ரோ கெமிக்கல் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகளின் குளிரூட்டும் அமைப்புகளுக்கு நாள்தோறும் பெருமளவிலான தண்ணீர் தேவைப்படுகிறது.
உதாரணமாக, 2022 இல் அமைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் இரசாயன ஆலை மட்டும், அந்நகர மக்கள் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரின் அளவுக்குச் சமமான தண்ணீரை தினசரி உறிஞ்சிப் பயன்படுத்துகிறது.
கடல் நீரைக் குடிநீராக்கும் ‘டிசேலினேஷன்’ (Desalination) ஆலையைக் கொண்டுவர உள்ளாட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தாலும், சுற்றுச்சூழல் அனுமதிகள், அதிக நிதிச் செலவு மற்றும் உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பால் அத்திட்டம் முடங்கியுள்ளது. நிலத்தடி நீர் கிணறுகளைத் தோண்டுவது மற்றும் தொழிற்சாலைக் கழிவுநீரை மறுசுழற்சி செய்வது போன்ற மாற்றுக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள முயன்றாலும், அவை நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகும்.
தற்போது அங்குள்ள மக்களுக்குத் தண்ணீர் பயன்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களைக் கழுவுவது, தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொழில்வளர்ச்சிக்கும் இயற்கை வளங்களுக்கும் இடையே சமநிலையைப் பேணாவிட்டால், எதிர்காலத்தில் உலகின் பல பெரிய நகரங்களும் இத்தகைய தீவிரக் குடிநீர் அவசரநிலையைச் சந்திக்க நேரிடும் என்று நீர் வள நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் ஓராண்டுக்கு மட்டுமே நீர் இருப்பு! வறட்சியின் பிடியில் அமெரிக்கா சந்திக்கும் விபரீதம்


