Last Updated:
Crude Oil Price | அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் விலையும் 6 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 91.83 டாலர்களாக அதிகரித்துள்ளது.
செங்கடலில் சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை இரு மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.
ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தின் மீது சவுதி படைகள் அண்மையில் வான்வழித் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில், செங்கடலில் சென்று கொண்டிருந்த இரு சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினர் அறிவித்துள்ளனர். ஹூதிகள் மீண்டும் தங்கள் தாக்குதலை தொடங்கிவிட்டதாகவும், இது தொடர்ந்தால் ஈரானையே அமெரிக்கா நேரடியாகப் பொறுப்பாக்கும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதனால், உலகின் மிகப்பெரிய எரிபொருள் உற்பத்தி மண்டலமான மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக, சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 7 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 100.79 அமெரிக்க டாலர்களாக வர்த்தகமானது.
கடந்த மே 22 ஆம் தேதிக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களைத் தாண்டுவது இதுவே முதல்முறையாகும். அதேபோன்று, அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் விலையும் 6 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 91.83 டாலர்களாக அதிகரித்துள்ளது.
சவுதி அரேபியா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்.. இரு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

