2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இதற்காக 2,723 பரீட்சை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விண்ணப்ப விவரங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் வசதி, நேற்று (23) முதல் ஓகஸ்ட் 03 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள அனைத்துப் பரீட்சார்த்திகளின் வருகைப் பதிவேடுகளும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர், பிறந்த திகதி, பாடசாலை விவரங்கள் உள்ளிட்ட தகவல்களில் ஏதேனும் பிழைகள் அல்லது திருத்தங்கள் தேவைப்பட்டால், அவற்றை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இணையவழியில் திருத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk இல் உள்ள Our Services பிரிவின் கீழ் அமைந்துள்ள Exam Information Centre சேவையை பயன்படுத்தலாம். அதேபோல், onlineexams.gov.lk என்ற இணையவழி பரீட்சை சேவை முறைமையின் மூலமாகவும் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகளின் தகவல்கள் துல்லியமாக இருப்பது அனுமதி அட்டை வழங்குதல், பரீட்சை மைய ஒதுக்கீடு மற்றும் பெறுபேறு வெளியீடு உள்ளிட்ட அனைத்து நிர்வாக நடவடிக்கைகளுக்கும் மிகவும் அவசியமானது என்பதால், பெற்றோர்களும் பாடசாலை நிர்வாகங்களும் குறித்த தகவல்களை கவனமாக சரிபார்த்து, தேவையான திருத்தங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இதற்காக 2,723 பரீட்சை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

