Last Updated:
சர்வதேச அரங்கில் களமிறங்கும் இந்த இளம் பந்துவீச்சாளரின் செயல்பாடு இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 (T20I) போட்டியில், ராஜஸ்தானைச் சேர்ந்த 24 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா இந்திய அணிக்காக தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், இந்திய அணியின் ஆடும் லெவனில் (Playing XI) யாஷ் தாக்குருக்குப் பதிலாக அசோக் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அசோக் சர்மா, தனது அசாத்தியமான பந்துவீச்சு வேகத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். சர்வதேச போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாக, இவர் 16 டி20 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஜிம்பாப்வே மண்ணில் இந்திய அணிக்காக டி20 போட்டியில் அறிமுகமாகும் 23-வது வீரர் என்ற பெருமையை அசோக் சர்மா பெறுகிறார். இதற்கு முன்னதாக 2024 ஜூலை மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரில் அபிஷேக் சர்மா, துருவ் ஜூரெல், ரியான் பராக், துஷார் தேஷ்பாண்டே மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அறிமுகமாகியிருந்தனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூரியவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்குகின்றனர். இஷான் கிஷன், திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோருடன் வேகப்பந்து வீச்சாளர்களாக பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ் மற்றும் அறிமுக வீரர் அசோக் சர்மா ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் தனது வேகத்தால் கவனம் ஈர்த்த அசோக் சர்மா, இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிடம் இருந்து பெற்ற ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தனது விளையாட்டுத் திறனை மேம்படுத்த பெரிதும் உதவியதாகக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அரங்கில் களமிறங்கும் இந்த இளம் பந்துவீச்சாளரின் செயல்பாடு இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


