Last Updated:
ஜப்பான் ஓபன் தொடரில் சென் யுஃபெய்யை வீழ்த்தியிருந்த சிந்துவுக்கு, இந்தத் தோல்வி மூலம் தொடர்ச்சியான வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது
சீனா ஓபன் பேட்மின்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து, உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யுஃபெய்யிடம் (Chen Yufei) போராடித் தோல்வியடைந்தார். இன்று நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு மிக அருகில் வந்தும், சிந்துவுக்கு ஏமாற்றமே எஞ்சியது.
சுமார் 1 மணிநேரம் 29 நிமிடங்கள் வரை நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், தொடக்கத்தில் இருந்தே இரு வீராங்கனைகளும் தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்தி தீவிரமாகப் போராடினர். போட்டியின் முதல் செட்டை சிந்து 21-16 என்ற புள்ளிக் கணக்கில் சிறப்பாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் அபாரமாக விளையாடிய சிந்து, வெற்றிக்கு ஒரே ஒரு புள்ளி மட்டுமே தேவைப்பட்ட நிலையை (20-16) எட்டினார். ஆனால், உள்நாட்டு ரசிகர்களின் பேராதரவோடு விளையாடிய சென் யுஃபெய், தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்து 22-20 என இரண்டாவது செட்டைக் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார்.
வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில், இரு வீராங்கனைகளும் சமபலத்துடன் மோதினர். எனினும், போட்டியின் இறுதி நேரத்தில் ஏற்பட்ட சில தவறுகள் மற்றும் உடல்ரீதியான சோர்வு காரணமாக, சிந்து 18-21 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை இழந்தார். இறுதியில் 16-21, 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சென் யுஃபெய் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
ஜப்பான் ஓபன் தொடரில் சென் யுஃபெய்யை வீழ்த்தியிருந்த சிந்துவுக்கு, இந்தத் தோல்வி மூலம் தொடர்ச்சியான வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது


