தர்மேந்திர பிரதானே வினாத்தாள் கசிவை எதிர்த்து போராடியவர் தான்: CJP போராட்டத்துக்கு மத்தியில் பழைய படம் வைரல்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரமும் அதனை எதிர்த்து இளைஞர்களின் போராட்டமும் தான் நாடு முழுவதும் பற்றி எரிகிறது. குறிப்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது தான் இளைஞர்களின் பிரதான கோரிக்கைகளுள் ஒன்று.
தற்போது யார் பதவி விலக வேண்டும் என கோரி மாணவர்கள் போராடுகிறார்களோ அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் தலைவராக இருந்தபோது, வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியவர் தான். தர்மேந்திர பிரதான் 1997ஆம் ஆண்டு வினாத்தாள் கசிவை எதிர்த்து நடத்திய போராட்டம் குறித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸில் இது குறித்து செய்தி வெளியாகியுள்ளது. 1997ஆம் ஆண்டில், ஒடிசாவில் வினாத்தாள் கசிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தேசிய செயலாளராக இருந்த தர்மேந்திர பிரதான், அக்கால காங்கிரஸ் அரசுக்கு எதிராக களமிறங்கி போராட்டம் நடத்தினார்.
ஒடிசா மாநில தலைமை செயலகத்திற்கு முன்னால் சுமார் 1,500 மாணவர்களுடன் இணைந்து தர்மேந்திர பிரதான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் அமைதியாக நடந்த இந்த போராட்டம், காவல்துறையின் தடியடியால் வன்முறையாக மாறியது. காவல்துறை தடியடி நடத்தியதில், தர்மேந்திர பிரதான் பலத்த காயமடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக அவரது பழைய நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட தர்மேந்திர பிரதானின் காயமடைந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. மாணவர் அரசியலில் மிகவும் துடிப்பான தலைவராக அறியப்பட்ட அவர், பொது பிரச்சனைகளுக்காக தனது தனிப்பட்ட நலன்களை தியாகம் செய்வதில் உறுதியாக இருந்தவர். இந்த போராட்டத்தின் மூலம் ஒடிசாவின் முக்கிய மாணவர் தலைவர்களில் ஒருவராக அவர் உருவெடுத்தார்.
கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று கல்வி அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான், மீண்டும் அதே போன்ற ஒரு வினாத்தாள் கசிவு சர்ச்சையின் மையமாக மாறியுள்ளார். அவரே நீட் தேர்வு முறைகேடுகளை அனுமதிக்கலாமா என்பது தான் பலரும் எழுப்பும் கேள்வி.
In 1997, this man was the ABVP National Secretary and was just about to join the Bharatiya Janata Party. There was a paper leak in Odisha and there was a major protest. This man participated in them. He was beaten by the police.
“We staged a protest against the Odisha… pic.twitter.com/U8UojIQ9BF
— Mohak Mangal (@mohakmangal) July 22, 2026 “>
தன்னுடைய இளமை பருவத்தில் போராட்டத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த பிரதான், இன்று பெரிய, அரசியல் நெருக்கடியிலும் சிக்கியுள்ளார். எந்த சர்ச்சையால் ஒரு மாணவர் தலைவராக உருவெடுத்தாரோ, இன்று அதே போன்ற ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்.
இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்து நாடு முழுவதும் பரவி வருகிறது. மத்திய அரசு இளைஞர்களின் கோரிக்கைகளை ஏற்று தர்மேந்திர பிரதானை பதவி விலக செய்யுமா அல்லது இந்த பிரச்சினையை எப்படி கையாள போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

