Last Updated:
ஜனநாயக அமைப்பில் பிரச்சனைகளைப் பற்றிப் பேச நாடாளுமன்றமே சரியான இடம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களை அரசியல் சுயநலத்திற்காக எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி நேற்று முன்தினம் பேரணி சென்றபோது, காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காயமடைந்து சிகிச்சை பெறும் மாணவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இதே போன்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவும் காயமடைந்த மாணவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
இதற்கிடையே டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார்.
மேலும் போராட்டத்தின் போது தடியடி நடத்தியது தொடர்பான வீடியோக்கள் உள்ளதாகவும் அதனை தாங்கள் பார்க்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வீடியோக்களை பார்க்க நேரமில்லை, தனக்கு விருப்பமும் இல்லை என தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்த நிலையில் மாணவர்களின் போராட்டம் குறித்து, சமூக வலைதளமான ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாட்டின் எதிர்காலமான மாணவர்களையும் இளைஞர்களையும் சில அரசியல் கட்சிகள் தங்களின் சுயநல நோக்கங்களுக்காகப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
दिल्ली में जारी विरोध-प्रदर्शन गंभीर चिंता का विषय हैं। यह अत्यंत दुर्भाग्यपूर्ण है कि हमारे देश के छात्रों और युवाओं को कुछ लोग अपने राजनीतिक स्वार्थों की पूर्ति के लिए एक राजनीतिक औज़ार के रूप में इस्तेमाल करने का प्रयास कर रहे हैं। प्रधानमंत्री श्री @narendramodi के नेतृत्व… pic.twitter.com/yIQLUiw8xc
— Rajnath Singh (@rajnathsingh) July 22, 2026
மேலும், மாணவர்களின் கோரிக்கைகளையும் உணர்வுகளையும் அரசு முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளதாகவும், எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் செயற்கையாகக் கோபத்தை உருவாக்கி மக்களைத் திசைதிருப்ப முயல்வதாகக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், ஜனநாயக அமைப்பில் பிரச்சனைகளைப் பற்றிப் பேச நாடாளுமன்றமே சரியான இடம் என்றும், அதை விட்டுவிட்டு வீதிகளில் இறங்கி அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
NEET விவகாரம்: ‘அரசியல் லாபத்திற்காக மாணவர்களை பயன்படுத்தும் எதிர்க்கட்சிகள்!’ – ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!


