Last Updated:
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் தடியடி வழக்கு அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு. தலைமை நீதிபதி சூர்ய காந்த், “நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்றார்.
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உங்கள் நேரத்தையும், என் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி நேற்று முன்தினம் பேரணி சென்றபோது, காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காயமடைந்து சிகிச்சை பெறும் மாணவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இதே போன்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவும் காயமடைந்த மாணவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார்.
மேலும் போராட்டத்தின் போது தடியடி நடத்தியது தொடர்பான வீடியோக்கள் உள்ளதாகவும் அதனை தாங்கள் பார்க்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வீடியோக்களை பார்க்க நேரமில்லை, தனக்கு விருப்பமும் இல்லை என தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தார்.
இதனிடையே டெல்லியில் இளைஞர்களின் போராட்டம் 3 ஆம் நாளாக நீடிக்கும் நிலையில் மேற்குவங்கத்தில் இருந்து 20 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் அடுத்தடுத்து போராட்டங்கள் நடக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் நாடாளுமன்றத்தில் நீட் வினாத்தாள் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மூன்றாம் நாளாக முடங்கி உள்ளது.
டெல்லி தடியடி வீடியோவை பார்க்க நேரமில்லை, விருப்பமும் இல்லை – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்


