Tamilnadu
oi-Vishnupriya R
சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் பிரதான கட்டடத்தில் உள்ள முதல்வர் அலுவலக அறை இடமாற்றம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு இடமாற்றப்படுகிறது என சொல்லப்படுகிறது.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பிரதான கட்டடத்தில் முதல்வரின் அறை செயல்பட்டு வருகிறது. அவரது அறைக்கு அருகே முதல்வரின் தனிச் செயலாளர்கள் உள்ளிட்டோரின் அலுவலகங்கள் உள்ளன.
இந்த நிலையில் முதல்வராக பொறுப்பேற்ற விஜய்யை பார்க்க தலைமைச் செயலகத்திற்கு நாள்தோறும் நிறைய விஐபிக்கள் வருகை தருகிறார்கள். அவ்வாறு வரும் அவர்களுக்கு இடவசதி போதிய அளவில் இல்லை என முதல்வர் கருதுகிறாராம்.
இதனால் அவரது அறை, முதல்வர் செயலகத்தையும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10ஆவது மாடிக்கு இடமாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் தினந்தோறும் நீலாங்கரை வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். இதனால் அவரது கான்வாய் வாகனம் கடக்க ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வேலைக்குச் செல்வோர் அவதியடைந்தனர்.
இந்த நிலையில் சாலையில் ஒரு பிரிவை பிரித்து அதில் முதல்வரின் கான்வாய் வாகனம் செல்ல வசதி செய்யப்பட்டது. இதனால் அந்த போக்குவரத்து பிரச்சினை தீர்ந்தது. எனினும் விஜய் தனது வீட்டை நீலாங்கரையில் இருந்து போயஸ் தோட்டத்திற்கு மாற்ற போவதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு முக்கிய அரசியல் பிரமுகரின் வீட்டை விலை பேசியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதெல்லாம் யூகத்தின் பேரில் சொல்லப்பட்டதே தவிர உண்மைத்தன்மை தெரியவில்லை. ஆனால் தற்போது வரை விஜய் நீலாங்கரை வீட்டிலிருந்தே தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார்.
இந்த நிலையில் புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் சென்றுவிட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தை தலைமைச் செயலகமாக மாற்றலாம் என ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் யோசனை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
அதாவது தலைமைச் செயலகத்தில் நிறைய வாகனங்களை நிறுத்த முடியாததால் தலைமைச் செயலகத்தை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்ற முதல்வரிடமும் யோசனை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. கோயம்பேடு அருகே உள்ள விருகம்பாக்கம், சாலிகிராமம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நிறைய ஐஏஎஸ் அதிகாரிகளின் வீடு இருப்பதால் கோயம்பேட்டுக்கு வருவது எளிது என சொல்லப்பட்டது. ஆனால் இதுவும் உண்மையா என தெரியவில்லை.
இந்த சூழலில் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறை, முதல்வர் செயலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அங்கு இடநெருக்கடி காரணமாக முதல்வர் அலுவலகத்தை மட்டும் மாற்றிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாம்.
1975 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை அமைக்கப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்களில் மிக உயரமான கட்டடம் இதுவாகும்.
இங்கு 10 மாடிகள் உள்ளன. தமிழக தலைமைச் செயலகத்தின் பல்வேறு அரசு துறைகள் இங்குதான் இயங்கி வருகின்றன. சுமார் 5000 பேர் பணியாற்றி வருகிறார்கள். கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த கட்டடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டது. தலைமைச் செயலக ஜிம், ஏசி வசதி செய்யப்பட்ட அறைகள், சூரிய வெளிச்சத்தால் கண் கூசாத கண்ணாடிகள் பொருத்தப்பட்டு இவை அதிக வெளிச்சத்தை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு முதல்வர் அலுவலகம் வர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.




