International
oi-Halley Karthik
கீவ்: நேற்று உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வணிக கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். இந்த கப்பலில் 5 இந்தியர்கள் இருந்த நிலையில், ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்.
இந்தியர்களின் உயிரிழப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

‘MV GOLDEN LEO’ என்கிற வணிக கப்பல், நேற்று மாலை உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. அப்போது ரஷ்யாவின் ஏவுகணைகள் இந்த கப்பலை தாக்கின. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது கப்பலுக்குள் மொத்தம் 17 பேர் இருந்தனர். இதில் 5 பேர் இந்தியர்கள். இந்த 5 இந்தியர்களில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இந்த சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், பாதிக்கப்பட்டவர் மீண்டு வர பிரார்த்திப்பதாக கூறியிருக்கிறது.
மேலும் வணிக கப்பல்களை குறி வைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலையும் இந்தியா கண்டித்திருக்கிறது. சர்வதேச கடல்சார் வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு முட்டுக்கட்டை போடும் இத்தகைய தாக்குதல் வருத்தமளிக்கின்றன என்றும், இவை இனி வரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

