வேலையை விட்டு நின்றாலும் PF பணத்திற்கு வட்டி கிடைக்குமா? EPFO விதிமுறைகள் சொல்வது என்ன?
தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு மாதம் தோறும் பிஎஃப் பணம் வரவு வைக்கப்படுகிறது. நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு மாதம் தோறும் வட்டி வழங்குகிறது. காம்பவுண்டிங் முறையில் இந்த வட்டி கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படுகிறது.
வேலைக்கு செல்லும் நபர் அதனை விடுத்து ஒரு தொழிலில் ஈடுபடுகிறார், பெண்கள் குடும்ப சூழல் காரணமாக வேலையை விடுகின்றனர் எனும் போது பிஎஃப் கணக்கில் மாதாந்திர பங்களிப்பும் நின்று விடுகிறது. இவ்வாறு வேலையை விடுபவர்களுக்கு பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு தொடர்ந்து வட்டி கிடைக்குமா, அந்த பணத்தை பிஎஃப் கணக்கில் வைக்கலாமா, வேண்டாமா என பல சந்தேகங்கள் எழுகின்றன.

பலரும் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை பிஎஃப் கணக்கில் பங்களிப்பு இல்லையென்றால், அக்கவுண்ட் செயலற்றதாகி (Inoperative) வட்டி வருவது நின்றுவிடும் என கருதுகின்றனர். ஆனால் இது தவறு. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தற்போதைய விதிகளின்படி, உங்கள் பிஎஃப் கணக்கு 58 வயது வரை தொடர்ந்து வட்டி ஈட்டி தரும். நீங்கள் வேலையை விட்டுவிட்டாலும் அல்லது நீண்ட காலம் புதிய வேலைக்கு செல்லாமல் இருந்தாலும், உங்கள் கணக்கில் உள்ள பணம் முடங்காது. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு தொடர்ந்து வட்டி கிடைக்கும்.
உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை நீங்கள் முழுமையாக எடுத்துவிடாமல், அப்படியே வைத்திருந்தால் மட்டுமே வட்டி தொடர்ந்து கிடைக்கும். ஒருவர் 58 வயதை எட்டிய பிறகு, அவரது பிஎஃப் கணக்கு செயலற்ற கணக்காக கருதப்படுகிறது. அந்த வயதிற்கு பின் அக்கவுண்டில் இருக்கும் பணத்திற்கு புதிய வட்டி கணக்கிடப்படாது.
நீங்கள் எப்போது பணி ஓய்வு பெறுகிறீர்கள் என்பதை பொறுத்து வட்டி கணக்கிடப்படும் முறை சற்று மாறுபடும். நீங்கள் 40 அல்லது 45 வயதில் வேலையை விட்டுவிட்டு பிஎஃப் பணத்தை எடுக்காமல் இருந்தால், உங்களுக்கு 58 வயது வரை தொடர்ந்து வட்டி கிடைக்கும். ஆனால் நீங்கள் 55 வயதிற்கு மேல் பணி ஓய்வு பெற்றால், ஓய்வு பெற்ற தேதியிலிருந்து 36 மாதங்கள் வரை மட்டுமே வட்டி கிடைக்கும். அதன் பிறகு கணக்கு செயலற்றதாகிவிடும்.
வேலையை விட்டு நின்ற உடன் பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றால், அதை அப்படியே விட்டுவிடுவது நீண்ட கால சேமிப்பிற்கு நல்லது. ஏனெனில் காம்பவுண்டிங் முறையில் உங்கள் பணம் வளரும். எப்போது பிஎஃப் கணக்கில் உங்கள் ஆதார் மற்றும் KYC விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
எனவே 30 வயதில் வேலையை விட்டாலும் கூட உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணம் 58 வயது வரை பாதுகாப்பாக வட்டி பெற்று தரும். இந்த சேமிப்பை அவசரப்பட்டு எடுக்காமல், ஓய்வு காலத்திற்கான நிதியாக திட்டமிடுவது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
