International
oi-Nantha Kumar R
மெக்சிகோ: மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் நகரின் அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 என்று பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

மெக்சிகோ நாட்டில் தெற்கு மாநிலமாக சியாபஸ் உள்ளது. இந்நிலையில் தான் கடற்ரை நகரமான சியாபாஸ் அருகே இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் குலுங்கின. வீட்டு அலமாரிகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
இதையடுத்து வீட்டில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். வெட்டவெளியில் பொதுமக்கள் தஞ்சமடைந்தனர். மெக்சிகோவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்த புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ”மெக்சிகோவின் புவேர்ட்டோ மடேரோ என்ற பகுதியின் அருகே பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அருகே உள்ள இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 என பதிவாகி உள்ளது. ” என கூறப்பட்டுள்ளது. மேலும், ”சுனாமி அலைகள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்று வார்னிங்கும் செய்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சியாபாஸ் நகரை சுற்றிய 300 கிலோமீட்டர் தொலைவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மெக்சிகோவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. அதன்படி எல் சால்வடார் மற்றும் குவாத்தமாலா உள்ளிட்ட நாடுகளிலும் பொதுமக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். இதனால் மெக்சிகோ, எல் சால்வடார், குவாத்தமாலா உள்ளிட்ட நாடுகளின் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
குறிப்பாக மெக்சிகோ மக்கள் அதிக பயத்தில் உள்ளனர். ஏனென்றால் இந்த 7.3 என்ற ரிக்டர் நிலஅதிர்வுக்கு முன்பாக அந்த நாட்டில் 5.2, 4.5, 6.1 என்று 3 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் நிலநடுக்கங்களால் அந்த மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

