Last Updated:
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சிவராஜ் மோட்டேகாவ்ன்கருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று சிபிஐ வலியுறுத்தியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கைதானவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 136 வினாக்களில் 111 வினாக்கள் தேர்வில் வந்த வினாக்களுடன் ஒத்துப்போவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அளித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீட் மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி, ஜெய்ப்பூர், குர்கான், நாசிக், புனே, லத்தூர், அகில்யாநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், இடைத்தரகர்கள், பயிற்சி மைய உரிமையாளர்கள் என 13 பேரை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கில் கைதான மகாராஷ்டிராவின் லத்தூரை சேர்ந்த நீட் பயிற்சி மைய உரிமையாளர் சிவராஜ் மோட்டேகாவ்ன்கர் (Shivraj Motegaonkar) ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
Shivraj Motegaonkar
இந்நிலையில், சிவராஜ் மோட்டேகாவ்ன்கருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், லத்தூரில் ‘ரேணுகாய் கெமிஸ்ட்ரி கிளாசஸ்’ (Renukai Chemistry Classes) என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி வரும் சிவராஜ் மோட்டேகாவ்ன்கரின் கைபேசியிலிருந்து கையால் எழுதப்பட்ட 132 வேதியியல் வினாக்களின் படங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதில், 111 வினாக்கள் மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் இடம்பெற்றிருந்ததாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. அந்த வினாக்களின் புகைப்படங்கள், தேர்வு நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்பே எடுக்கப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேசிய தேர்வு முகமையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வேதியியல் விரிவுரையாளர் பி.வி. குல்கர்னி நடத்திய சிறப்பு வகுப்புகளில் சிவராஜ் மோட்டேகாவ்ன்கரின் மகன் ஆதித்யா கலந்துகொண்டதாகவும், அங்கு கசிந்த வேதியியல் கேள்விகள் வழங்கப்பட்டதாகவும், அந்த கேள்விகளை வைத்து அவர் கையால் எழுதப்பட்ட குறிப்புகளைத் தயாரித்ததாகவும் சிபிஐ கூறியுள்ளது.
CBI
இதற்காக பி.வி. குல்கர்னிக்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், கசியவிடப்பட்ட இந்த வினாத்தாள் பி.டி.எஃப் வடிவில் டெலிகிராம் செயலி மூலம் 10 லட்சத்திற்கு விற்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, Guess Paper என்ற பெயரில் 410 கேள்விகள் அடங்கிய PDF கோப்பு தேர்வுக்கு சில வாரங்களுக்கு முன்பே பரப்பப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதில் இடம்பெற்ற 120 வேதியியல் கேள்விகள், நீட் தேர்வின் வேதியியல் வினாக்களுடன் ஒத்துப்போனதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சிவராஜ் மோட்டேகாவ்ன்கருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று சிபிஐ வலியுறுத்தியுள்ளது.
“கசிந்த 136 வினாக்களில், 111 வினாக்கள் தேர்வில் வந்தவற்றுடன் ஒத்துப்போகிறது” – நீதிமன்றத்தில் சிபிஐ அதிர்ச்சி தகவல்!


