Last Updated:
போட்டியின் கடைசி 5 நிமிடங்களில் அர்ஜென்டினா கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்தியது. கூடுதல் நேரத்தின் போது மீண்டும் ஒரு கோலை அடித்து இங்கிலாந்திற்கு அர்ஜென்டினா அதிர்ச்சி கொடுத்தது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்ற நிலையில் மைதானத்துக்குள் புகுந்த அரசியலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கால்பந்து ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ள FIFA உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இதில் முதல் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற 2 ஆவது அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா – இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தியது. இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடின. இங்கிலாந்து முதல் கோலை அடித்து போட்டியை தன்வசப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அர்ஜென்டினா தனது அட்டாக்கிங்கை தீவிரப்படுத்தியது.
ஆனாலும் இங்கிலாந்தின் தடுப்புகளை தாண்டி கோல் அடிப்பதில் அர்ஜென்டினா சிரமப்பட்டது. ஆனால் போட்டியின் கடைசி 5 நிமிடங்களில் அர்ஜென்டினா கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்தியது. கூடுதல் நேரத்தின் போது மீண்டும் ஒரு கோலை அடித்து இங்கிலாந்திற்கு அர்ஜென்டினா அதிர்ச்சி கொடுத்தது. இறுதியாக அர்ஜென்டினா அணி 2க்கு1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இதனிடையே தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாக்லாந்து தீவுகள், அர்ஜென்டினாவில் மால்வினாஸ் என அழைக்கப்படுகின்றன. இந்தத் தீவுகளின் உரிமை தொடர்பாக பிரிட்டனுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் உள்ளது. 1982-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பிரிட்டன் வெற்றி பெற்ற நிலையில், மால்வினாஸ் தீவுகள் பிரிட்டன் நிர்வாகத்தின் கீழ் வந்தன.
இந்த நிலையில், இங்கிலாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா வீரர்கள் மால்வினாஸ் தீவுகள் எங்களுக்கேச் சொந்தம் என்ற பேனரை ஏந்தி மைதானத்தில் நின்றனர். கால்பந்து போட்டிகளின் போது எவ்வித அரசியல் பதாகைகளையும் காட்டக் கூடாது என பிபா விதி கூறும் நிலையில், அர்ஜென்டினா வீரர்களின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Jul 16, 2026 10:40 AM IST


