Tamilnadu
oi-Shyamsundar I
சென்னை: நேற்று ஒரே நாளில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாகு உள்ளிட்ட 19 முக்கிய அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வெறும் வழக்கமான நிர்வாக நடைமுறை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், இந்த மாற்றத்தின் பின்னணியில் உளவுத்துறை கொடுத்த மிக ரகசியமான அறிக்கை தான் காரணம் என்கிறது கோட்டை வட்டாரம்.

ரகசிய ரிப்போர்ட்டில் சிக்கிய பிளாக் ஷீப்கள்
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும், முக்கியத் துறைகளின் உச்ச பதவிகளில் இருக்கும் சில உயர் அதிகாரிகள், இன்னும் பழைய திமுக ஆட்சியின் முக்கியத் தலைவர்களுடனும், அறிவாலயப் புள்ளிகளுடனும் மிக நெருக்கமான தொடர்பில் இருப்பதாக முதல்வர் விஜய்க்கு உளவுத்துறை மூலமாகத் துல்லியமான தகவல்கள் சென்றுள்ளன.
அரசின் மிக முக்கியமான கொள்கை முடிவுகள், பட்ஜெட் தயாரிப்புகள் மற்றும் ரகசியத் திட்டங்கள் கசியக்கூடும் என்ற அச்சம் இந்த அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, மிக முக்கியப் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகள், புதிய அரசை விடவும் முந்தைய ஆட்சியாளர்களின் வழிகாட்டுதல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்ததாக எழுந்த புகாரே இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற நடவடிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளது..
ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாகு மாற்றப்பட்டதன் மர்மம் என்ன?
மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், திடீரென அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநராக மாற்றப்பட்டு, பயிற்சித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்ற ஒரு அதிகாரியை, மிக முக்கியமான துறையிலிருந்து ஒரு ஓரங்கட்டப்பட்ட துறைக்கு மாற்றி உள்ளனர். அவருக்குப் பதிலாக வி. அருண் ராய் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சுப்ரியா சாகு ஐஏஎஸ், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் (EDII) ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் முந்தைய திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட பல முக்கிய முடிவுகளில் இவருக்குப் பெரிய பங்கு இருந்தது. தற்போது இவர் மாற்றப்பட்டு உள்ளார்.
ஆக்சனில் இறங்கிய விஜய்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான சவால்களை எழுப்பி வரும் நிலையில், கோட்டைக்குள் இருக்கும் ஸ்லீப்பர் செல்களை அப்படியே விட்டால் அது ஆட்சிக்கு ஆபத்தாக முடியும் என்பதை முதல்வர் விஜய் தெளிவாக உணர்ந்துள்ளார்.
ஐடி துறையில் இருந்த பிரதீப் யாதவ் எம்எஸ்எம்இ துறைக்கும், அத்துறையில் இருந்த அதுல் ஆனந்த் ஐடி துறைக்கும் மாற்றப்பட்டதும் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியே ஆகும்.
நிர்வாகத்தில் எந்தவிதமான சமரசமும் செய்யப்போவதில்லை என்பதையும், தங்களது விசுவாசம் புதிய அரசின் பக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும் இந்த மாற்றத்தின் மூலம் விஜய் ஐஏஎஸ் வட்டாரத்திற்கு மிக அழுத்தமாக உணர்த்தியுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
முந்தைய திமுக ஆட்சியின் நிழல் கூட தன் அமைச்சகத்தின் மீது படியக் கூடாது என்பதில் விஜய் காட்டியுள்ள இந்த போல்ட் மூவ் தமிழக அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

