இந்தியாவுக்கு குட் பை சொல்லும் Oneplus ஸ்மார்ட் போன் நிறுவனம்..!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!
ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு போட்டியாக, குறைந்த விலையில் பிரீமியம் அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை வழங்கி புகழ்பெற்ற ஒன்பிளஸ் (Oneplus ) நிறுவனம், திடீரென இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒன்பிளஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட்போன் உலகில் முன்னணி நிறுவனமாக திகழும் ஒன்பிளஸ் நிறுவனத்தின், தனது தாய் நிறுவனமான ‘குவாங்டாங் ஓப்போ மொபைல் டெலிகாம் கார்ப்பரேஷன்’ (Guangdong Oppo Mobile Telecommunications Corporation) பெரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சீனா அல்லாத பிற சர்வதேச சந்தைகளில் இருந்து ஒன்பிளஸ் நிறுவனத்தை மட்டும் படிப்படியாக வெளியேற திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி கூறுகிறது.

முதல்கட்டமாக ஒன்பிளஸ் நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இந்த வாரம் முதலே தனது செயல்பாடுகளை நிறுத்த போகிறது. அதேசமயம், இந்திய சந்தையில் உடனடியாக வெளியேறாமல் ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்படும் என்றும், 2027ஆம் ஆண்டின் இறுதியில் வெளியேறி விடும் என்றும் அந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது.
பிரீமியமான அம்சம் கொண்ட போன் வேண்டும் ஆனால் ஐபோன் வாங்கும் அளவுக்கு பணம் இல்லை என்பவர்களுக்கு ஒன்பிளஸ் போன்கள் தான் சிறந்த சாய்ஸாக இருந்தன. ஒவ்வொரு முறை அப்கிரேடட் போன்கள் வரும் போது ஒன்பிளஸ் வாடிக்கையாளர்கள் உடனே அதனை மாற்றி கொள்வார்கள். அந்த அளவுக்கு ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளது ஒன்பிளஸ்.
திடீரென ஒன்பிளஸ் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பயனர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. ஒன்பிளஸின் தாய் நிறுவனமான ஓப்போ, தனது வணிக உத்திகளை மாற்றியமைத்து வருகிறது. இதன்படி, ஓப்போவின் கீழ் உள்ள மற்றொரு பிராண்டான Realme, சீன உள்நாட்டு சந்தையிலிருந்து வெளியேற தயாராகி வருகிறது. அதேநேரத்தில், ஐரோப்பாவின் பின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், ஐஸ்லாந்து பிராந்தியங்களில் தனது கவனத்தை செலுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் ஒன்பிளஸின் செயல்பாடுகளை குறைத்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற பெரிய சந்தைகளில் ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட்ட , ஒன்பிளஸ் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட முடியாமல் போய்விட்டது. மேலும் அமெரிக்காவில் சீன நிறுவனங்களுக்கு எதிராக நிலவும் அரசியல் சூழல், மற்றும் ஆப்பிள் நிறுவனம் ஒன்பிளஸ் மீது தொடர்ந்துள்ள வர்த்தக ரகசியங்களை திருடியதாகக் கூறப்படும் வழக்கு போன்றவை நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு பெரும் தடையாக மாறியுள்ளன.
அதே வேளையில் Memory chip தட்டுப்பாட்டால் போன் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால், குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வழங்கும் ஒன்பிளஸின் நோர்ட் சீரிஸ் தயாரிப்புகளின் லாபம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இப்படி நிதி சார்ந்த அழுத்தங்களும் ஒன்பிளஸின் திடீர் வெளியேற்றத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. தற்போதைக்கு சீனாவில் மட்டும் தனது வணிகத்தை தொடர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

