International
oi-Vigneshkumar
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இப்போது மிக மோசமான நெருக்கடி நிலவி வருகிறது. ஒரு பக்கம் பலூசிஸ்தான் தாங்கள் தனி நாடு என்றும் பாகிஸ்தானுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அறிவித்துவிட்டது. இன்னொரு பக்கம் PoK பகுதியில் பாகிஸ்தான் அரசு மீதான வெறுப்பு அதிகரித்து வருகிறது. நிலைமையைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் விழித்து வருகிறது.
இத்தனை காலமாகப் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வைத்தே அரசியல் செய்து வந்தது. அண்டை நாடுகளுக்கு தீவிரவாதிகளை அனுப்புவது உள்ளிட்ட மோசமான செயல்களை செய்து வந்தது. ஆனால், இப்போது பாகிஸ்தானுக்கு திரும்பிய பக்கமெல்லாம் பயங்கரமான அடி விழுந்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் செய்வதறியாத விழித்து கொண்டு இருக்கிறது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஒரு பக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஷெரீப் அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமடைந்துள்ளது. ஒரு மாதத்தை கடந்து இந்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க அங்கு செல்லும் அத்தியாவசிய பொருட்களை ஷெரீப் அரசு முடக்கியது. இருப்பினும், அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தி, போராட்டத்தை தீவிரப்படுத்தவே செய்துள்ளது.
கடந்த வாரம் போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் சர்தார் அமன் கான் ராவலக்கோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது வெளிப்படையாகவே இது தொடர்பாக குற்றஞ்சாட்டியிருந்தார். உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சாடிய அவர், இதனால் அப்பகுதியில் மோசமான நெருக்கடி உருவாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
ரொம்ப முக்கியம்
மேலும் அவர், “PoK என்பது பாகிஸ்தானின் ஒரு பகுதி அல்ல. எங்களுக்கு பாகிஸ்தான் தேவையில்லை. மாறாக, பாகிஸ்தானுக்குத்தான் நாங்கள் தேவைப்படுகிறோம். கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கி பேரணியாக செல்ல வேண்டுமா” என்று பொதுமக்களிடம் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு “செல்வோம்” என்று மக்கள் பதிலுக்கு கோஷமிட்டனர்.
இதற்கிடையே அங்கு நேற்று நடந்த போராட்டத்தில் இது அடுத்த கட்டத்திற்கு போய் இருக்கிறது. நேற்று பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய அமன் கான், “POK என்பது சுதந்திர பகுதி இல்லை.. சர்ச்சைக்குரிய பகுதியும் இல்லை. ஆனால், இது ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி” என கூறியிருந்தார். அவரது இந்த வரி முக்கியமானது. இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரை சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருந்தது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தை முன்னெடுக்கும் நபரே அதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
பலூசிஸ்தான்
இது ஒரு பக்கம் இருக்க பலூசிஸ்தான் பகுதியும் பாகிஸ்தானுக்கு தலைவலியாக மாறியுள்ளது. நீண்ட காலமாகவே பலூச் சுதந்திரம் கோரி போராடி வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாக பலூச் அரசியல் ஆர்வலர் மிர் யார் பலோச் நேற்று தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “பலூசிஸ்தான் மக்கள் முடிவெடுத்துவிட்டனற். பலூசிஸ்தான் என்பது பாகிஸ்தானின் ஒரு பகுதி இல்லை.. உங்கள் அராஜகத்தை உலகம் இனியும் அமைதியாக வேடிக்கை பார்க்காது. பலூசிஸ்தானில் பல ஆண்டுகளாக மனித உரிமை மீறல்கள், அரசியல் ஒடுக்குமுறை போன்ற பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. இதனால் பலூசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து சுதந்திரமாக செயல்படும்” என அறிவித்தார்.
அடக்குமுறை
இயற்கை வளங்கள் நிறைந்த பலூசிஸ்தான், பாகிஸ்தானின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணமாக இருந்தாலும், மக்கள் தொகை அடிப்படையில் சின்ன மாகாணமாகும். பாகிஸ்தானின் அடக்குமுறைக்கு எதிராக அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாகவே பிரிவினைவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் அடக்குமுறையையே பதிலாகப் பாகிஸ்தான் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.




