மீண்டும் இலங்கைக்கு (கட்டுநாயக்கவுக்கு) திரும்புவதற்குத் தேவையான போதிய எரிபொருள் அந்த விமானங்களில் இல்லாத காரணத்தால், அவை அந்த வலயத்துக்கு அருகிலுள்ள வான்பரப்பில் சுமார் 1 மணித்தியாலமும் 10 நிமிடங்களும் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன.
மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டதன் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் பெரும் சவாலுக்கு உள்ளாகின.
நேற்று (14) மாலை 5:10 மணிக்கு குவைத் நோக்கிப் புறப்பட்ட யூ.எல்.-229 (UL-229) விமானமும், மாலை 6:36 மணிக்கு தம்மாம் நோக்கிப் புறப்பட்ட யூ.எல்.-253 (UL-253) விமானமும் இவ்வாறு பாதிப்புக்குள்ளாகின.
A-321 நியோ (A-321neo) ரகத்தைச் சேர்ந்த இந்த இரண்டு விமானங்களும் மத்திய கிழக்கு வலயத்தை நெருங்கிய வேளையில், ஈரான் நாடு அந்த வலயத்தை நோக்கித் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இதன் விளைவாகப் பாதுகாப்புக் கருதி, குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தங்களது வான்பரப்பை உடனடியாக மூடின.
வான்பரப்பு மூடப்பட்டதால், குறித்த நாடுகளுக்குள் நுழைய முடியாமல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தவித்தன. அதேவேளை, மீண்டும் இலங்கைக்கு (கட்டுநாயக்கவுக்கு) திரும்புவதற்குத் தேவையான போதிய எரிபொருள் அந்த விமானங்களில் இல்லாத காரணத்தால், அவை அந்த வலயத்துக்கு அருகிலுள்ள வான்பரப்பில் சுமார் 1 மணித்தியாலமும் 10 நிமிடங்களும் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன.
இந்நிலையில், விமானிகளின் துரித நடவடிக்கையைத் தொடர்ந்து, பின்னர் வான்பரப்புத் திறக்கப்பட்டதும் விமானங்கள் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டன. இந்த இரண்டு விமானங்களும் இன்று (15) அதிகாலை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.
இதே போர்ச் சூழல் காரணமாக மேலும் பல வெளிநாட்டு விமானங்களும் தரையிறக்க முடியாமல் வான்பரப்பில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

