எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீர்கொழும்பு நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (14) தனது விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்தது.
சிறைச்சாலையில் தமக்கு உடற்பயிற்சி செய்வதற்குப் போதிய நேரம் இல்லை எனக் கூறி, ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ எனும் கைதி, சிறைச்சாலை அதிகாரி ஒருவரைக் கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். குறித்த கைதி குழப்பமாக நடந்துகொண்டதன் காரணமாகவே இந்த மோதல் வெடித்ததாக சிஐடி நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிஐடி நீதிமன்றிற்கு அறிவித்தது.
மேலும், வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொழும்பிலிருந்து 89 பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்தது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.


