Nitin Gadkari: மகன்களுக்காக பெட்ரோலில் எத்தனால் கலக்கிறேனா..? பொங்கி எழுந்த நிதின் கட்கரி.. என்ன நடந்தது?
இந்தியா முழுவதும் பெட்ரோலில் எத்தனால் கலப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெரும் விவாதம் வெடித்திருக்கும் இதேவேளையில் மத்திய அரசு E25 பெட்ரோலுக்கான சோதனையை துவங்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான நிதின் கட்கரி (Nitin gadkari), அவருடைய மகன்கள் நடத்தும் எத்தனால் நிறுவனங்களுக்கு சாதகமாக தான் தொடர்ந்து பெட்ரோலில் எத்தனால் கலப்பை அதிகரிப்பதாக தகவல்கள் பரவியது.
இந்த கருத்துக்கு நிதின் கட்கரி கடுமையான எதிர்ப்பும், மறுப்பும் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரான நிதின் கட்கரி மகன்களான நிகில் கட்கரி, சாரங் கட்கரி தனித்தனியாக சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தி ஆலையை வைத்து நிர்வாகம் செய்து வருகின்றனர்.

மூத்த மகனான நிகில் கட்கரி CIAN Agro Industries & Infrastructure Ltd என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார், இந்நிறுவனத்தின் பங்கு விலை தற்போது 1549 ரூபாயாக உள்ளது, 2026ல் மட்டும் இந்நிறுவன பங்குகள் 173 சதவீதமும், 5 வருடத்தில் 1487 சதவீதமும் வளர்ச்சி அடைந்து இன்று 4,340 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக உள்ளது.
இதேபோல் நிதின் கட்கரியின் இளைய மகனான சாரங் கட்கரி Manas Agro Industries & Infrastructure Ltd என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். இந்நிறுவனம் 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறுவனம், இன்னும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை.
இவ்விரு நிறுவனங்களும் எத்தனால் கலப்பு கொள்கை வாயிலாக பெரிய அளவில் பயன்பெறுவதாக கருத்து நிலவுகிறது.
இந்த நிலையில் நிதின் கட்கரி எத்தனால் கலப்பு திட்டத்தின் மூலம் எனக்கு தனிப்பட்ட ஆதாயம் இருப்பதாக கூறப்படுவது ஏற்க முடியாது, இந்த கருத்துக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
என்னுடைய மகன்களின் நிறுவனத்தில் எத்தனால் பங்கு மிகவும் சிறியது, அரசின் எத்தனால் கொள்முதலில் அவர்கள் நிறுவனத்தின் மொத்த பங்கீடு கடுகளவு மட்டுமே. இதுமட்டும் அல்லாமல் அவர்களின் வர்த்தகம் 1600 கோடி ரூபாய் கடனில் இயங்கி வருகிறது.
இதேபோல் எத்தனால் கொள்முதல் விலையில் இவர்களின் நிறுவனத்திற்கு எவ்விதமான தொடர்பும் இல்லை, மேலும் அரசு சர்க்கரை தயாரிப்பில் இருந்து வரும் எத்தனால் மட்டும் வாங்குவது கிடையாது, சோளம், மூங்கில் என அனைத்து விதமான விவசாய பொருட்களில் இருந்து வரும் எத்தனாலை வாங்குகிறது.
பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது நான் முதலில் கொண்டு வரவில்லை, வாஜ்பாய் காலத்தில் இருந்து பேசப்படும் விஷயம். இதேபோல் நான் எத்தனால் கலப்புக்கு மட்டும் அல்லாமல் அனைத்து மாற்று எரிபொருளுக்கும் உதாரணமாக ஹைட்ரஜென், எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறேன்.
இந்த நிலையில் என்னை சார்ந்த தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
மேலும் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும் போது வாகனங்களின் மைலேஜ் குறைவதையும் ஒப்புக்கொண்டு உள்ளார், ஆனால் E20 பெட்ரோல் மூலம் வாகனங்களின் பாகங்கள், இன்ஜின்கள் பாதிக்கப்படுவதை நிதின் கட்கரி முழுமையாக மறுத்துள்ளார். மக்களுக்கு E20 பெட்ரோல் வாங்க விருப்பம் இல்லையெனில் 100 சதவீத பெட்ரோல் வாங்கலாம், ஆனால் அதற்கு அதிக தொகை கொடுக்க வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.

