அடுத்த வாரம் முதல் ஈரானுக்கு பேரழிவு: அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க மிரட்டல்..!!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம் முதல் ஈரான் மிக கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள போகிறது என மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜூலை 7ஆம் தேதியில் இருந்து அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பரம் குற்றம்சாட்டி தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதல் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் தான் இந்த மோதலே மீண்டும் உண்டானது. வழக்கம் போல இரு நாடுகளும் வார்த்தை மோதலையும் ஆயுத மோதலையும் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். ஈரான் அமெரிக்கா உடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வராவிட்டால், அடுத்த வாரம் முதல் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
Fox News தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வந்தே ஆக வேண்டும் அப்படி வராதபட்சத்தில், அடுத்த வாரம் அந்த நாட்டுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அவர்களின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும், அனைத்து பாலங்களையும் தகர்த்துவிடுவோம், என அவர் மிரட்டியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் கடக்க வரி விதிக்கப்படும் என கூறிய டிரம்ப் ஒரே நாளில் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார். அரபு நாடுகளின் தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.
இதற்கிடையே ஈரான் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்கள், ஈரான் பேச்சுவார்த்தைக்கு இணங்கும் வரை அல்லது டிரம்ப் போதும் என சொல்லும் வரை தொடரும் என அமெரிக்க ராணுவம் திட்டவட்டமாக கூறுகிறது.
மேலும் ஈரான் துறைமுகங்கள் மீது மீண்டும் அமெரிக்க கடற்படை முற்றுகையை தொடங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதே இந்த முற்றுகையின் நோக்கம் என அமெரிக்கா கூறுகிறது. ஆனால் ஈரான் தரப்போ இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் மோதல் இன்னும் தீவிரமடையும் சூழலே உண்டாகியுள்ளது.அதே வேளையில் அமெரிக்க கருவூல துறை, ஈரானின் மத்திய வங்கியுடன் தொடர்புடைய சுமார் 130 மில்லியன் டாலர் மதிப்புள்ள டிஜிட்டல் சொத்துக்களை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. ஈரானின் சட்டவிரோத வருவாய் ஆதாரங்களை முடக்குவதே இதன் நோக்கம் என அமெரிக்க அரசு தெரிவித்துளது.
அமெரிக்காவின் மிரட்டல் மற்றும் பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வர முடியும் என்று அமெரிக்கா நினைத்தால், அது தவறு என ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி தெரிவித்துள்ளார்.இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலை தொடர்வதால் ஜூன் மாதம் கையெழுத்தான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்து விட்டதாகவே எடுத்து கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தத் தாக்குதல்களால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சுமார் 15% உயர்ந்துள்ளது.

