Last Updated:
கடந்த 6 மாதங்களில் 2 கோடி லிட்டர் நச்சுத்தன்மை கொண்ட பால் விநியோகம் செய்யப்பட்டது உறுதியானது.
மகாராஷ்ட்ராவில் கடந்த 6 மாதங்களில் சுமார் 2 கோடி லிட்டர் நச்சுத்தன்மை கொண்ட பால் விநியோகம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் தாராசிவ் மாவட்டத்தில் உள்ள பூம் தாலுகாவில் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, கடந்த 6 மாதங்களில் 2 கோடி லிட்டர் நச்சுத்தன்மை கொண்ட பால் விநியோகம் செய்யப்பட்டது உறுதியானது. குறிப்பாக 9 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 லட்சத்து 4 ஆயிரம் லிட்டர் கலப்பட பால் விநியோகம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒவ்வொரு 100 லிட்டர் தூயப்பாலுடன் 10 லிட்டர் போலி பால் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலின் தோற்றத்தில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த பாமாயில், சோப்பு பவுடர், மலிவான ரசாயனங்களை கலந்ததும் உறுதியானது. இந்நிலையில், பால் நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், 8 நாட்களாக தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். மேலும், கலப்பட பாலை பயன்படுத்திய பொதுமக்களின் உடல்நலம் குறித்து மருத்துவக் குழு பரிசோதனை மேற்கொண்டு வருகிறது.
பாமாயில், சோப்பு பவுடர், ரசாயனம்.. நச்சுத்தன்மை கொண்ட பால் விநியோகம்.. மகாராஷ்ட்ராவில் அதிர்ச்சி!


