International
oi-Nantha Kumar R
காத்மாண்டு: நேபாளத்தில் கூலி தொழிலாளி ஒருவரின் பெற்றோரை கடந்த 2012ம் ஆண்டில் காட்டு யானை கொன்றது. இதனால் அந்த கூலி தொழிலாளி தனது சொந்த கிராமத்தை விட்டு 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு கிராமத்தில் வசித்து வந்த நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சென்ற அதே காட்டுயானை அவரது மருமகள் மற்றும் பேரனை மிதித்து கொன்றுள்ளது. இந்த சோக சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நேபாளத்தை சேர்ந்தவர் சனிச்சரா போட். கூலி தொழிலாளி. இவரது தந்தை பெயர் புதிராம். தாய் பெயர் ஜராலி. இவர்கள் அனைவரும் நேபாளத்தில் உள்ள சித்வான் தேசிய பூங்காவையொட்டிய மாடி எனும் கிராமத்தில் வசித்து வந்தனர்.
இந்த பகுதியில் ‘துர்பே’ என்ற காட்டு யானை வலம் வந்து கொண்டிருந்தது. இந்த காட்டு யானை மிகவும் குரூர குணம் கொண்டது. ஈவு இரக்கமேயின்றி மனிதர்களை கொல்லும் தன்மை கொண்டது.
கடந்த 2012ம் ஆண்டில் காட்டு யானை ‘துர்பே’விடம் தொழிலாளி சனிச்சரா போட் என்பவரின் தந்தை புதிராம் – தாய் ஜராலி ஆகியோர் சிக்கினர். இருவரையம் காட்டு யானை மிதித்து கொன்றது. இதில் சனிச்சரா போட் மனம் நொந்து போனார். ஒரே நேரத்தில் தாய்- தந்தையை பறிகொடுத்த சோகத்தில் இருந்து அவரால் உடனடயாக மீள முடியவில்லை. மேலும் காட்டு யானை ‘துர்பே’விடம் தாய் – தந்தையை பலி கொடுத்ததால் அவர் தனது குடும்பத்தினர் மற்றவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேறு கிராமத்துக்கு இடம்பெயர முடிவு செய்தார்.
அதன்படி அவர் தனது மகன் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் மாடி பகுதியில் இருந்து வெளியேறினார். அங்கிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜகத்பூர் என்ற கிராமத்தில் தஞ்சமடைந்தார்.அங்கு அவர் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். அதோடு இந்த ஜகத்பூர் மற்றும் அவர்கள் முன்பு வசித்த மாடி கிராமத்துக்கு இடையே ‘ராப்டி’ ஆறு செல்கிறது. ஆற்றை கடந்து வசிப்பதால் இனி நிம்மதியாக வசிக்கலாம். காட்டு யானை ‘துர்பே’வின் அச்சுறுத்தல் இருக்காது என்று நினைத்தார். இப்படியாக கடந்த 14 ஆண்டுகள் கடந்தன.
ஆனால் தற்போது சனிச்சரா போட் தனது தாய் – தந்தையை கொன்ற அதே காட்டுயானையிடம் தனது மருமகள் மற்றும் பேரனை பலி கொடுத்துள்ளார். கடந்த 12 தேதி மருமகள் ஆஷிகா போட் மற்றும் 4 வயது பேரன் பரத் போட் ஆகியோர் வீட்டில் இருந்தனர். இந்த சமயத்தில் அவர்களின் வீட்டுக்குள் நுழைந்த காட்டு யானை ‘துர்பே’ இருவரையும் தாக்கி கொன்றது. இதனால் சனிச்சரா போட் மிகவும் துயரத்தில் உறைந்து போய் உள்ளார்.
காட்டு யானை ‘துர்பே’விடம் இருந்து தப்பிக்க குடும்பத்துடன் சொந்த ஊரை விட்டு 9 கிலோமீட்டர் தொலைவில் வசித்தாலும் 14 ஆண்டுகள் கழித்து அதே யானை அவரது குடும்பத்தினரின் 2 பேரை மீண்டும் கொன்று இருப்பது நேபாளத்தையே உலுக்கி உள்ளது. ஒரு காட்டு யானையிடம் தொழிலாளியின் மொத்த குடும்பமே சிக்கி பலியாகி உள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி தாய், தந்தை, மருமகள், பேரனை காட்டு யானை ‘துர்பே’விடம் பறிகொடுத்த சனிச்சர போட் கூறுகையில், ”பெரிய ஆற்றை தாண்டி 9 கிலோமீட்டர் தொலைவில் வசித்தால் யானையிடம் இருந்து தப்பி விடலாம் என்று நினைத்தோம். கடந்த 14 ஆண்டுகளாக நாங்கள் பாதுகாப்பாக இருந்தோம். ஆனால் இப்போது என் தாய், தந்தையை கொன்ற அதே யானை வந்து என்னுடைய மருமகள் மற்றும் பேரனை கொன்றுவிட்டது” என்று கூறி கதறி அழுதார்.
இந்த கொலை கார காட்டு யானை ‘துர்பே’ என்பது நேபாளத்தில் குரூரமான காட்டு யானையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த யானைக்கு என்று தனியே ‘விக்கிப்பீடியா’ உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு முதல் 16 வருடங்களில் மொத்தம் 25 பேரை கொன்றுள்ளது. இதில் சனிச்சர போட்டின் தாய், தந்தை, மருமகன், பேரன் உள்ளிட்ட 4 பேர் அடங்குவார். இந்த யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க அதன் உடலில் ‘டிராக்கிங் காலர்’ பொருத்தப்பட்டது. முதலில் 2016ல் , அதன்பிறகு 2020, அதன்பிறகு 2023ல் ‘டிராக்கிங் காலர்’ பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

