Last Updated:
தெலங்கானாவில் 6 பேர் கொலை வழக்கில் தேடப்பட்ட ராஜ்குமார், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் வீடியோவில், சிறுமி குடும்பத்தினர் தன்னை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறியுள்ளார்.
தெலங்கானாவை உலுக்கிய 6 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி இரண்டு நாட்களுக்குப் பின் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள தெய்வாலகுடா கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான ராஜ்குமார். இவருக்கு சரிதா என்ற மனைவியும், இரண்டு மற்றும் மூன்று வயதில் இரு குழந்தைகளும் இருந்தனர். கடந்த மே மாதம் பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில் ராஜ்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ராஜ்குமார் மீது சிறுமியின் தாய் லட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார், இரண்டு மாத சிறைவாசத்திற்குப் பின்பு அண்மையில் ஜாமினில் வெளியே வந்தார். சிறை சென்ற கோபத்தில் இருந்தவர் கடந்த 10 ஆம் தேதி, தனது கைதுக்கு காரணமான சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், வீடு திரும்பியவர் சிறுமியின் தாயார் லட்சுமி மற்றும் பாட்டியையும் வெட்டிக் கொலை செய்தார். தொடர்ந்து, தனது மனைவி சரிதா மற்றும் இரு குழந்தைகளையும் கொடூரமாக வெட்டிக் கொன்றுவிட்டு தலைமறைவானார். தெலங்கானாவில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில், தப்பியோடிய குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் 2 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், பெஞ்ஜர்லா பகுதியில் புதர் மண்டிக் கிடந்த வயல்வெளியில் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று போலீசார் விசாரித்ததில் 6 பேரை கொடூரமாக கொலை செய்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. அருகில் பாதி விஷம் இருந்த டப்பாவும் கிடந்துள்ளது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் உடலில் எந்தவொரு காயமும் இல்லாததால், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை போலீசார் உறுதி செய்தனர். மேலும், அவரின் செல்போனில் பதிவு செய்திருந்த செல்ஃபி வீடியோ மற்றும் 100 ரூபாய் முத்திரைத் தாளில் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.
அதில், பக்கத்து வீட்டில் இருந்த சிறுமி தெரிந்தே தன்னுடன் பழகியதாக கூறியுள்ளார். அதை அறிந்து கொண்ட சிறுமியின் தயார் லட்சுமியும், அவரின் பாட்டியும் தன்னை மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக சொத்தை விற்று பணம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாவும் ராஜ்குமார், கடைசி வீடியோவில் தெரிவித்துள்ளார். இதை தனது மனைவி சரிதாவிடம் போட்டுக் கொடுத்து விடுவதாக மிரட்டியவர்கள், ஒரு கட்டத்தல் போலீசில் புகார் அளித்து போக்சோ சட்டத்தில் சிறைக்கு அனுப்பியதையும் குறிப்பிட்டுள்ளார்.
முழு கதையையும் அறிந்த தனது மனைவி கடும் கோபத்தில் இருந்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இதனால், சிறையில் இருந்து வெளியே வந்ததும், சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாய், பாட்டியை திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், தன்னை கட்டிய மனைவியும் வெறுத்ததால் இரு குழந்தைகளுடன் சேர்த்து அவரையும் கொடூரமாக கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இறுதியாக, மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட தனது உடலையும் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் புதைக்க வேண்டும் என்று ராஜ்குமார் அந்த வீடியோவில் கூறியுள்ளார். தெலங்கானாவில் ஒரே நாளில் 6 பேரை கொடூரமாக கொலை செய்த குற்றவாளி, பணத்திற்காக சிறுமியின் குடும்பம் தன்னை போக்சோ வழக்கில் சிக்க வைத்ததாக கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.100 பத்திரத்தில் கடிதம்.. செல்ஃபி வீடியோ.. அடுத்தடுத்து 6 பேர் கொலை.. விபரீத முடிவுக்கு முன் இளைஞர் சொன்ன பகீர் வாக்குமூலம்!


