International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ‘க்ரூஸ் ‘ வகை ஏவுகணையை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியர் ஒருவர் பலியானார். மேலும் 6 இந்தியர்கள், 2 உக்ரைன் ஊழியர்கள் உள்பட மொத்தம் 8 பேர் காயமடைந்த நிலையில் இந்த தாக்குதலின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் இருநாடுகள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் சார்பில் ‘க்ரூஸ்’ வகை ஏவுகணையை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஓமனின் தெற்கு நீர்வழிப்பாதையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘மொம்பசா'(Mombasa), அல் பஹியா (Al Bahiyah)’ என்ற பெயர் கொண்ட இந்த கப்பல்கள் பயணித்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 2 கப்பல்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில் இந்திய ஊழியர் ஒருவர் பலியானார். மேலும் 6 இந்தியர்கள், 2 உக்ரைனியர்கள் என 8 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 4 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் தான் இந்த தாக்குதலின் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஈரானின் புரட்சிகர காவல் படை விளக்கம் அளித்துள்ளது. அதில், ”ஈரானின் கடல்சார் எச்சரிக்கைகளைப் பின்பற்ற தவறியதோடு, விதிமீறிய 2 டேங்கர் கப்பல்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பல்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.
அதாவது தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘மொம்பசா’, ‘அல் பஹியா’ ஆகிய கச்சா எண்ணெய் கப்பல்கள் ஈரானின் எச்சரிக்கையை தொடர்ந்து ஆபத்தான கடல் பாதையில் பயணித்ததாம். ஈரான் சார்பில் கன்னிவெடி புதைக்கப்பட்டுள்ள பாதையில் இந்த கப்பல்கள் பயணித்துள்ளன. இதனால் ஈரான் எச்சரித்து தடுக்க முயன்றுள்ளது.
ஆனால் அந்த கப்பல்கள் கண்டுக்கொள்ளவில்லை. அதோடு ஈரானை ஏமாற்றும் வகையில் கப்பல்களின் இருப்பிடத்தை கண்காணிக்க பயன்படுத்தப்படும் ‘நேவிகேஷன் சிஸ்டம்’ அமைப்பை இந்த கப்பல்கள் ‘ஆஃப்’ செய்துள்ளது. இதனால் தான் ஈரான் இந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்களை குறிவைத்து தாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

