கோலாலம்பூர்:
சபா, தாவாவ், பண்டார் ஃபஜாரில் (Bandar Fajar) உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் மோதலில் உணவகப் பொருட்களுக்குச் சேதம் விளைவித்த குற்றத்திற்காக 19 மற்றும் 20 வயதுடைய இரு இளம்பெண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து உணவகத் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, தவாவ் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறையினர் (CID) தீவிர விசாரணை நடத்தி, ஜாலான் ஹாஜி கரீம் (Jalan Haji Karim) சாலை ஓரத்தில் வைத்து இரு சந்தேக நபர்களையும் மடக்கிப் பிடித்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் விலிங்டன் என்சானா வாட் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணையின்படி, அந்த இரு பெண்களுக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாய்த்தகராறு, பின்னர் அடிதடிச் சண்டையாக மாறியுள்ளது. இதில் உணவகத்தில் இருந்த பல பொருட்கள் சேதமடைந்தன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் முறையான பயண ஆவணங்கள் எதுவுமின்றி மலேசியாவில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் கீழ் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிடிபட்ட இருவருக்குமே இதற்கு முன் எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லை என்றும், கைது நடவடிக்கையின் போது அவர்களிடம் இருந்து பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வழக்கு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டம் பிரிவு 160-இன் கீழும், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்த குற்றத்திற்காகப் பிரிவு 427-இன் கீழும் விசாரிக்கப்பட்டு வருகிறது.



