Business
oi-Vigneshkumar
சென்னை: ஏஐ வந்த பிறகு ஐடி துறை மொத்தமாக மாறிவிடும் என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது. குறிப்பாக இந்திய ஐடி சந்தை அவுட்சோர்சிங்கை நம்பியே இருக்கும் நிலையில், அது காலியாகும் எனப் பலரும் சொல்கிறார்கள். இதற்கிடையே இந்தியாவின் மிக பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் AI சார்ந்த வளர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதற்காக பல ஆயிரம் பேர் கொண்ட குழுவை உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏஐ வந்த பிறகு அனைத்து துறைகளிலும் மிக பெரிய மாற்றம் நடந்து வருகிறது. திரும்பத் திரும்ப செய்யக்கூடிய பணிகளை ஏஐ காலி செய்து வருகிறது. இதனால் பல்வேறு துறைகளில் மிக பெரிய மாற்றம் நடந்து வரும் நிலையில், அதில் ஐடி துறையும் விதிவிலக்கு இல்லை.

இந்திய ஐடி துறை
அதிலும் குறிப்பாக இந்திய ஐடி சந்தை இதனால் மிக பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளும் என தெரிகிறது. ஏனென்றால் இந்திய ஐடி நிறுவனங்கள் செய்யும் பெரும்பாலான பணிகளை ஏஐ மூலம் செய்ய முடியும். இதனால் இந்திய ஐடி சந்தை வரும் காலங்களில் மிக பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்பதே பல வல்லுநர்களின் கணிப்பாக இருக்கிறது.
டிசிஎஸ்
இந்தச் சூழலில் தான் டிசிஎஸ் நிறுவனம் ஏஐ சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்களுடன் நேரடியாக இணைந்து ஏஐ தொழில்நுட்பத்தை விரைவாகச் செயல்படுத்த உதவும் சிறப்புப் பொறியாளர்களை உருவாக்கும் பணிகளில் டிசிஎஸ் இறங்கியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்வோரில் 1% முதல் 1.5% வரை இந்தப் பிரிவில் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. அதாவது சுமார் 5,900 முதல் 8,900 ஊழியர்கள் வரை இதில் இருப்பார்கள்.
அதேநேரம் புதிய நியமனங்கள் மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படுமா அல்லது ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனத்தில் வேறு பிரிவுகளில் வேலை செய்வோருக்கு மறுபயிற்சி அளித்து இந்தப் பொறுப்புகள் வழங்கப்படுமா என்பது குறித்த விளக்கம் இல்லை.
ஜெனரேட்டிவ் AI
ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் ஐடி துறை மிக பெரிய மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. இனிமேல் ஐடி துறையில் பெரிய அளவிலான ஊழியர்கள் தேவைப்பட மாட்டார்கள். பிராஜக்ட்கள் ஆண்டு கணக்கில் போகாது. சில மாதங்களில் முடியலாம். இந்த அச்சங்களால் இந்தியாவின் 315 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐடி துறையில் குழப்பம் நிலவுகிறது.
அதேபோல பல ஆண்டுகளாக சீராக வளர்ந்து வந்த டிசிஎஸ், இப்போது வளர்ச்சியில் இன்னுமே தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதனால் ஏஐ, டேட்டா பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களைக் கைப்பற்றவும் ஆய்வு செய்து வருகிறது.
வருவாய் பாதிப்பு
சர்வதேச அளவில் AI துறையில் முதலீடுகளை இப்போதும் அதிகரித்து வந்தாலும், அதில் இருந்து கிடைக்கும் வருவாய் சற்று மந்தமடைந்துள்ளது. அதற்கு டிசிஎஸ் நிறுவனமும் விதிவிலக்கு இல்லை. ஜூன் காலாண்டில் டிசிஎஸின் AI வருவாய் வளர்ச்சி 13 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய காலாண்டில் 28 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
AI தொழில்நுட்பத்தை நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் பயன்படுத்த வேண்டும் என்பதே இப்போது டிசிஎஸின் திட்டமாக இருக்கிறது. இதற்காக ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்து வருகிறது. ஊழியர்களுக்கான பயிற்சிகள், AI தொடர்பான புதிய திறன்களை உருவாக்குதல், AI தொழில்நுட்ப நிபுணர்களை பணியமர்த்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



