Last Updated:
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மிக முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மறுஅறிவிப்பு வரும் வரை மூடுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஓமன் கடற்பகுதியில் 11 இந்திய மாலுமிகளுடன் சென்ற வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்தச் சம்பவத்தின் போது கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளில் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு இந்திய மாலுமி மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணியில் ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இப்பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் மிகவும் கவலைக்குரியவை என்று தெரிவித்துள்ள இந்திய அரசு, அனைத்துத் தரப்பினரும் உடனடியாகப் பதற்றத்தைக் குறைத்து, அமைதியை மீட்டெடுக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
சைப்ரஸ் நாட்டின் கொடியுடன் சென்ற இந்த கொள்கலன் கப்பல் அனுமதிக்கப்படாத பாதையில் சென்றதாகக் கூறி, ஈரானின் புரட்சிகரக் காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதை வெறும் “எச்சரிக்கைச் சூடு” என்று ஈரான் குறிப்பிட்டாலும், அமெரிக்க மத்திய கட்டளையகம் இதனை சிவிலியன் கப்பல் மீதான நேரடித் தாக்குதல் என்று சாடியுள்ளது. இந்தத் தாக்குதலால் கப்பலின் எஞ்சின் அறை பலத்த சேதமடைந்து தீப்பற்றியதால், மாலுமிகள் அனைவரும் உயிரைக் காக்க அவசரப் படகுகள் மூலம் கப்பலை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மிக முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மறுஅறிவிப்பு வரும் வரை மூடுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் உலக அளவில் பெரும் பொருளாதார ஸ்தம்பிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்தக் கடல்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கா ஈரானிய ராணுவ இலக்குகள் மீது சுமார் 140 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்குப் பழிவாங்கும் விதமாக, ஈரான் தனது அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி ஜோர்டான், குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஓமன் கடற்பகுதியில் வணிகக் கப்பல் மீது ஈரான் படைகள் தாக்குதல்.. மத்திய அரசு கடும் கண்டனம்


