தங்கம் வாங்குவதில் டிவிஸ்ட் வைத்த சீனா..!! பயங்கர பிளானிங்கா இருக்கே..!! இந்தியா என்ன செய்ய போகுது?-
பொதுமக்கள் தங்கம் வாங்குவது தொடர்பாக சீனா எடுத்துள்ள ஒரு முடிவு தான் உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. உலகளவில் அதிகமாக தங்கம் வாங்கும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது சீனா. அதாவது சீன மக்கள் இந்தியர்களை போலவே அதிகமாக தங்கம் வாங்கி சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.
தற்போது தங்கம் விலையும் வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து 24% வரை சரிந்துள்ளது. இதனால் வழக்கத்தை விட சீன மக்கள் மத்தியில் தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகமானது. வழக்கமாக சீன நாட்டு மக்கள் அதிகமாக தங்கத்தை நகை, நாணயம், கட்டிகளாக வாங்கி வைத்திருந்த நிலையில் அண்மை காலமாக சீனா மக்களிடையே பெரும் மாற்றம் வந்துள்ளது. தங்கத்தை பழைய படி நகை, நாணயம், கட்டிகளாக வாங்காமல் பேப்பர் கோல்டு அதாவது ஈடிஎஃப் போன்ற வடிவங்களில் வாங்க தொடங்கினார்கள்.

கையில் தங்கத்தை வாங்காமலேயே, தங்கத்தின் விலையை வைத்து லாபம் ஈட்டும் டெரிவேட்டிவ்ஸ் (Derivatives) மற்றும் லெவரேஜ் (Leveraged Trading) முறைகளில் அதிகமான சீனர்கள் ஈடுபட தொடங்கினார்கள். அதாவது கையில் 10,000 ரூபாய் மட்டுமே வைத்து கொண்டு 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வர்த்தகத்தில் ஈடுபடுவது. இத்தகைய பந்தய முறை வர்த்தகங்களால் சீனாவில் தங்க சந்தையில் செயற்கையாக தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இது தங்கம் விலையில் நியாயமற்ற ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகிறதாம். அதாவது இல்லாத ஒரு தங்கம் நிஜமாகவே இருக்கும் தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த சூதாட்டம் வேகமாக வளர்ந்து வருவதை சீனா விரும்பவில்லை.
இந்நிலையில் தான் சீன வங்கிகள் தங்க டிரேடிங் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. சீனாவின் முன்னணி வங்கிகளான ஐ.சி.பி.சி ,போஸ்டல் சேவிங்ஸ் பேங்க் ஆஃப் சைனா உள்ளிட்ட பல வங்கிகள், சாதாரண மக்கள் பேப்பர் கோல்ட் (Paper Gold/Gold ETFs) முதலீடுகளில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த தொடங்கியுள்ளன. அரசின் அறிவுறுத்தலின் பேரில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது சீன மக்கள் நீங்கள் கடையிலோ அல்லது வங்கியிலோ சென்று வாங்கும் உண்மையான தங்கக் கட்டிகள், தங்கக் காசுகள் அல்லது நகைகளுக்கு சீனாவில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் கையில் தங்கத்தை வாங்காமலேயே, ஈடிஎஃப் வடிவங்களில் தங்கத்தின் விலையை வைத்து லாபம் ஈட்டும் டெரிவேட்டிவ்ஸ் முறை தங்க முதலீட்டுக்கு கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது.
தங்கம் என்பது ஒரு பாதுகாப்பான முதலீடு, அதை வெறும் சூதாட்ட கருவியாக பயன்படுத்துவதை சீனா விரும்பவில்லை. மேலும் தங்கம் விலை நிர்ணயம் என்பது பேப்பர் கோல்ட் முதலீடுகளால் அல்லாமல், உண்மையான தங்கத்தின் தேவையால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது சீனாவின் எண்ணம்.
இதனால் இனி அதிகமான சீன மக்கள் தங்கத்தை பேப்பர் கோல்ட் வடிவில் இல்லாமல் தங்க நகை, நாணயம், கட்டிகள் என உண்மையான தங்கமாக வாங்கி சேமிக்க தொடங்குவார்கள். இதனால் சீனாவின் தங்க இருப்பு இன்னும் இன்னும் அதிகமாகும். அனைத்து நாடுகளும் பேப்பர் தங்கத்தில் கவனம் செலுத்தும் போது சீனா மட்டும் மக்களை உண்மையான தங்கத்தை வாங்கி வைக்கும் வகையில் கொள்கையை கொண்டு வந்துள்ளது. இதனால் தங்க சந்தையில் பிசிக்கல் கோல்டுக்கு டிமாண்ட் அதிகமாகும். அதுமட்டுமில்லாமல் வரும் காலங்களில் அதிக உண்மையான தங்கம் கொண்ட நாடாக சீனா திகழும்.
இதன் மூலம் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்யும் அளவுக்கு கூட சீனா உயரும். தங்கம் யாரிடம் அதிகமாக உள்ளதோ அவர்களுக்கே உலக அரசியலிலும் பொருளாதாரத்திலும் முதலிடம் கிடைக்கும் அந்த தங்கம் உண்மையான தங்கமாக இருக்க வேண்டும் என்பதில் சீனா தெளிவாக உள்ளது.
தங்கம் ஒரு சூதாட்ட பொருள் அல்ல, அது ஒரு பொருளாதார பாதுகாப்பு என்பதை மக்களுக்கு சீன அரசு தெளிவாக எடுத்துரைத்துள்ளது. தற்போது சீனா கொண்டு வந்துள்ள இந்த கொள்கை வரும் காலங்களில் பல நாடுகளாலும் பின்பற்றப்படலாம் என சொல்லப்படுகிறது.ஆனால் அதற்கு கணிசமான அளவு தங்கம் சீனாவை சென்றடைந்திருக்கும். தங்கம் விவகாரத்தில் அடுத்து இந்தியா என்ன செய்ய போகிறது என்பது தான் நம் கேள்வி.

