பரந்தூர், ஓசூர், வேலூர், ராமேஸ்வரம்.. ஒரே கதை.. எந்த முன்னேற்றமும் இல்லையா..?
தமிழ்நாட்டில் பொருளாதார, வர்த்தக வளர்ச்சிக்கு முக்கியமான ஆதாரமாக விளங்கும் விமான நிலைய திட்டங்கள் அடுத்தடுத்து முடங்கி வருவது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இது தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் இருக்கும் பிரச்சனைகளில் துவங்கி அடுத்தடுத்து வேலைவாய்ப்பு, ஏற்றுமதி எனப் பல விஷயங்களுக்கு விமான நிலையங்களும், வான்வழி இணைப்பும் முக்கியமானதாக இருக்கும் வேளையில் 4 விமான நிலையங்களின் செயல்பாடுகள் முடங்கியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

பரந்தூர் விமான நிலையம்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான புதியு நுழைவு வாயில், சென்னையின் 2வது விமான நிலையம் என்ற பெருமையைக் கொண்டு இருக்கும் பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை விஜய் தலைமையிலான அரசு முடக்கியுள்ளது, இந்த விமான நிலையத்திற்காகக் கைப்பற்ற இடத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக முடிவு செய்யப்பட்டு உள்ளது.
விஜய் தலைமையிலான அரசு தற்போது விமான நிலையத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள இடத்தில் அதிகப்படியான நீர் நிலைகள் இருக்கிறது, என்றும் ரன்வே அமைக்க முடியாத நிலை உள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசு, மாநில அரசு, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து 3 இடங்களில் தேர்வு செய்து அதை முழுமையாக ஆய்வு செய்த பின்பே பரந்தூருக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் முக்கியமாக பரந்தூரில் தான் குறைவான மக்கள் இடம்பெயர்வு உள்ளது என்ற கோணத்திலும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னைக்கான 2வது விமான நிலையம் என்ற திட்டம் விஜய் தலைமையிலான அரசு மாற்று இடத்தை தேர்வு செய்யும் வரையில் வெறும் கனவு தான்.
ஓசூர் விமான நிலையம்
பெங்களூர்-க்கு அருகே தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழிற்துறை பகுதியாக இருக்கும் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு கையில் எடுத்து பலகட்ட பணிகளை மேற்கொண்டாலும் தற்போது 2 முக்கியமான பிரச்சனையில் மாட்டிக்கொண்டு உள்ளது.
முதல் பிரச்சனை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சமீபத்தில் சூளகிரியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை ரத்து செய்துள்ளது. இப்பகுதியில் Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனத்தின் ராணுவ ஆய்வு மற்றும் இயக்க பகுதி வரும் காரணத்தால் இந்த முடிவை எடுத்தது.
இரண்டாவது பிரச்சனை 150 கிலோமீட்டர் விதி, பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து 150 கிமீ சுற்றளவுக்கு எந்த கமர்சியல் விமான நிலையமும் 2033 வரையில் அமைக்கக் கூடாது என Bengaluru’s Kempegowda International Airport (KIA) நிர்வாகமும், மத்திய அரசும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ஓசூர் எல்லையில் அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
ராமேஸ்வரம் விமான நிலையம்
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு இதற்காக மண் பரிசோதனை செய்யப்பட்டது, ஆனால் இந்த சோதனையில் விமான நிலையம் அமைக்க ஏதுவான நிலம் இல்லை என முடிவுகள் வந்துள்ளது. இதனால் இதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ரன்வே அமைக்க முடியாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்தகட்டமாக இந்தியா கடற்படையில் விமான இயக்க பகுதியான INS Parundu பகுதியில் பயணிகள் விமானங்களை இயக்குவதற்கான வசதிகளை உருவாக்கும் மாற்றுத் திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவும் உறுதியாகவில்லை, இதனால் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் இல்லை.
வேலூர் விமான நிலையம்
வேலூரில் பயணிகள் விமான சேவை துவங்குவதற்காக டெர்மினல் கட்டிடம், 850 மீட்டருக்கு ரன்வே போன்றவை உதான் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டு தயாராக உள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கு Bureau of Civil Aviation Security (BCAS) அமைப்பிடம் இருந்து பாதுகாப்பு ஒப்புதலும், DGCA அமைப்பிடம் இருந்து கமர்சியல் விமானங்களை இயக்குவதற்கான லைசென்ஸ் பெற முடியாமல் இத்திட்டம் முடங்கியுள்ளது.
இப்படி தமிழ்நாட்டில் 4 விமான நிலையங்கள் பல்வேறு காரணத்தால் முடங்கி மாநிலத்தின் வளர்ச்சியில் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.
