ஆனானப்பட்ட திருப்பதி ஏழுமலையானுக்கே இந்த நிலைமையா? கல்யாணம் பண்ண கடன் வாங்கி தான் ஆகனும்!
எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் திருமணம் என்று வரும்போது கடன் வாங்க வேண்டிய சூழல் வந்துவிடுகிறது. மனிதர்களுக்குத் தான் இந்த நிலை என்று பார்த்தல்.. தெய்வமும் தன்னுடைய திருமணத்திற்கு கடன் வாங்கியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இன்றளவும் பக்தர்கள் கடன் வாங்கிய தெய்வத்தின் சுமையைக் குறைப்பதற்க்காக காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
பணக்கார தெய்வமாக விளங்கும் ஏழுமலையான் தன் திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கி இருக்கிறார். அந்த கடனை இன்றளவும் அடைத்து வருவதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அதற்காக பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி தங்கள் அர்ப்பணிப்பை செலுத்தவதாகவும் நம்பப்படுகிறது.

மும்மூர்த்திகளை சோதனை செய்த பிருகு முனிவர்: பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரில் யார் உயர்ந்தவர்? என்பதைத் தெரிந்து கொள்ள பிருகு முனிவர் புறப்பட்டார். அப்போது பிரம்மனும் சிவனும் தன்னை அலட்சியப்படுத்தியதாக முனிவருக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது. இதனால் விஷ்ணுவை சென்று பார்க்க புறப்பட்டார். இதற்காக வைகுண்டம் சென்ற பிருகு முனிவர், தான் வருவது கூட தெரியாமல் விஷ்ணு ஓய்வெடுப்பதைப் பார்த்தார். இதனால் கோபமடைந்து விஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார்.
தன்னை எட்டி உடைத்தாலும் பரவாயில்லை என்று நினைத்து உங்கள் காலில் அடிபட்டு விட்டதா என்று விஷ்ணு பிருகு முனிவரிடம் கேட்டார். இந்த பணிவு உண்மையிலேயே பிருகு முனிவருக்கு பிடித்து விட்டது. அவர் தேடி வந்த பொறுமையும் எளிமையும் உண்மையிலேயே விஷ்ணுவிடம் இருந்ததை பார்த்தார்.
மகாவிஷ்ணு பிருகு முனிவரை மன்னித்தாலும் அவருடைய மார்பில் வசிக்கும் லட்சுமிதேவிக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. இதனால் தான் அவமதிக்கப்பட்டு விட்டதாக உணர்ந்த லட்சுமி தேவி வைகுண்டத்தை விட்டு பூமிக்கு சென்றார். லட்சுமி இல்லாத வைகுண்டத்தில் விஷ்ணுவுக்கும் இருக்க விருப்பமில்லை. இதனால் இருவரும் சேர்ந்து பூலோகத்திற்கு வந்தனர். பூமியில் விஷ்ணு பகவான் ஸ்ரீனிவாசனாக அவதரித்தார். லட்சுமி தேவி, பத்மாவதி என்ற இளவரசையாக அவதரித்தார்.
பின்னர் நாளடைவில் பத்மாவதி தாயாரும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு தேவையான பெருந்தொகையை ஸ்ரீனிவாச பெருமாள் குபேரரிடம் கடனாகப் பெற்றார். அந்த கடனை கலியுகத்தின் இறுதிக்குள் வட்டியுடன் சேர்த்து செலுத்தி விடுவதாக வாக்குறுதியும் அளித்தார். இன்றளவும் அவர் குபேரரிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக கடனை திருப்பி அடைத்து வருவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
இதனால்தான் ஒவ்வொரு வீட்டிலும் குபேர மூலையை சுத்தமாக வைத்திருப்பார்கள். குபேரருடைய திசை வடக்கு. இதில் தேவையற்ற பொருட்கள், பழைய சாமான்கள் போன்றவற்றை ஒருபோதும் வைக்க கூடாது. முடிந்த அளவுக்கு குபேர மூலையை சுத்தமாக வைத்துக் கொண்டு குபேர எந்திரத்தை அந்த இடத்தில் வைத்தால் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

