Last Updated:
திருவாரூர் அருகே ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து 10 ஏக்கரில் ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம் பெறும் பட்டதாரி விவசாயி சாதனை.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்து குறைந்த வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வரும் நிலையில், மாற்று சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய முறையை பின்பற்றி ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை லாபம் ஈட்டி, பிற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரி விவசாயி கணேஷ் கமலக்கண்ணன்.
திருவாரூர் அருகே அரசவனங்காடு கிராமத்தைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான கணேஷ் கமலக்கண்ணன், கடந்த 2003-ம் ஆண்டு முதல் தனது 10 ஏக்கர் விளைநிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய முறையை அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் நெல் சாகுபடியுடன் 2 ஏக்கரில் மீன் பண்ணையை அமைத்து, அதன் கரையோரங்களில் தென்னை மரக்கன்றுகளை நட்டார். இந்த முயற்சி நல்ல பலனைத் தந்ததைத் தொடர்ந்து, தற்போது மீன் பண்ணையை 5 ஏக்கராக விரிவுபடுத்தியுள்ளதுடன், தென்னை மரங்களின் எண்ணிக்கையையும் 100 ஆக உயர்த்தியுள்ளார்.
மீன் வளர்ப்புக்கான தீவனச் செலவைக் குறைக்கும் நோக்கில், நாட்டுக்கோழி, கருங்கோழி, வனராஜா, கிரிராஜா உள்ளிட்ட உயர்ரக கோழிகளை வளர்த்து வருகிறார். தற்போது அவரது பண்ணையில் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் உள்ளன. அதேபோல் தலைச்சேரி, போயர் உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த 100 ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.
இதுமட்டுமின்றி, பண்ணைக்கு அருகில் 2 ஏக்கர் பரப்பளவில் காய்கறி தோட்டமும் அமைத்துள்ளார். நெல், மீன், தென்னை, கோழி, ஆடு மற்றும் காய்கறி சாகுபடி என மொத்தம் 10 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த பண்ணையை வேளாண்மைத் துறையினரும் மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கணேஷ் கமலக்கண்ணன் கூறுகையில், “ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு சுமார் ரூ.20 ஆயிரம் செலவாகிறது. ஆறு மாதங்கள் உழைத்த பிறகும் கிடைக்கும் லாபம் மிகவும் குறைவு. ஆனால், ஒரு ஏக்கர் மீன் பண்ணையில் 2,000 மீன்குஞ்சுகளை வளர்த்து, ஆறு மாதங்களில் சுமார் 2 டன் மீன்களை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஆண்டுக்கு ஒரு ஏக்கரிலேயே ரூ.4 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். இந்த அனுபவமே என்னை மீன் பண்ணையை 5 ஏக்கராக விரிவுபடுத்த ஊக்கமளித்தது,” என்றார்.
மேலும், “கோழி வளர்ப்பின் மூலம் முட்டை மற்றும் நாட்டுக்கோழி விற்பனையில் ஆண்டுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. 100 ஆடுகள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.4 லட்சம் வருமானம் கிடைக்கிறது. காய்கறி சாகுபடியில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. இவை அனைத்தையும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது,” என்று தெரிவித்தார்.
இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் மூலம் ஆண்டு முழுவதும் 10 விவசாயத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர நெல் சாகுபடியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். “முதல் ஆண்டு வருமானத்தை எதிர்பார்க்காமல் உழைப்பை முதலீடாக செலுத்தினால், இரண்டாவது ஆண்டிலிருந்து இரட்டிப்பு வருமானம் ஈட்டுவது விவசாயத்தில் சாத்தியமே. விவசாயிகள் மாற்றுச் சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய முறையை தைரியமாக மேற்கொள்ள வேண்டும்,” என்று கணேஷ் கமலக்கண்ணன் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
Jul 10, 2026 12:23 PM IST

