Tamilnadu
oi-Vishnupriya R
நாகை: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடைத் தெருவில் உள்ள பிரபல நகைக் கடையில் வெள்ளி கொலுசு திருடப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இரு பெண்கள் கொலுசு வாங்குவது போல் நடித்து கடைக்குள் சென்றுள்ளனர். அப்போது கூட வந்த மற்றொரு இளம் பெண், கவுன்ட்டரில் இருந்த வெள்ளி கொலுசை பார்ப்பது போல் கையால் இழுத்து தனது கைப்பையில் மறைத்து வைத்துள்ளார்.

இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்களை தேடி வருகிறார்கள்.
இது போல் நகை வாங்குவது போல் நடித்தும், துணி வாங்குவது போல் நடித்தும் பலர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் ஒரு சம்பவம்
சென்னை வியாசர்பாடி 14 ஆவது மேற்கு குறுக்குத் தெருவைச் சேர்ந்த அன்குஷ் (33). தனது வீட்டின் தரைதளத்தில் நகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 4 மாதங்களாக இவரது கடைக்கு வாடிக்கையாளர் போல் முகம் தெரியாதபடி ஹிஜாப் அணிந்து வந்த 50 வயது பெண் ஒருவர் நகை வாங்குவது போல் ஒவ்வொரு நகையையும் எடுத்து பார்த்தார்.
பின்னர் டிசைன் சரியில்லை என கூறி, எதையும் வாங்காமலேயே சென்றுவிடுவார். இந்த நிலையில் தனது கடையில் இருந்த நகைகளை அன்குஷ் கணக்கிட்டார். அப்போது சுமார் 85 சவரன் நகைகள் குறைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் 4 மாதங்களாக வாடிக்கையாளர் போல் வந்த பெண், அந்த நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடிய நகைகளை ஆடையில் மறைத்து வைத்து காரில் தப்பிச் செல்லும் காட்சிகளும் அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து அன்குஷ் புகாரின் பேரில் எம்கேபி நகர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து மீஞ்சூரை சேர்ந்த ரிகானா (50) என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து 20 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.

