Last Updated:
ரயில் பெட்டியை தேனிலவு அறை போல அலங்கரித்த விவகாரத்தில், டிக்கெட் பரிசோதகர் கிரிஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ரயில்வே நிர்வாகம் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ரயில் பெட்டியில் தேன் நிலவுக்கான அறை போல அலங்கரித்து தம்பதியினர் பயணித்த விவகாரத்தில் டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ரயிலின் முதல் வகுப்பு ஏசி அறையை “ஐ லவ் யூ” என்ற வாசகத்துடன் பலூன்கள், ரோஜா உள்ளிட்ட மலர்கள், தோரணங்களுடன் அலங்கரித்து இணையதளத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த ரயிலை முதலிரவு விரைவு ரயில் என்றும், தேனிலவு ரயில் என்றும் நெட்டிசன்கள் வர்ணித்த நிலையில், ரயிலில் எளிதில் தீப்பற்றக் கூடிய மலர்கள், பலூன்களை எப்படி அனுமதித்தார்கள் என்று ஒரு தரப்பினர் காட்டமாக கேள்வியெழுப்பினர்.
இந்நிலையில், இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மகாராஷ்டிராவை சேர்ந்த ’ரஹத் ரூம் டெக்கரேஷன்’ நிறுவனத்தினர் உரிய அனுமதியின்றி ரயிலுக்குள் ஏறி முதல் வகுப்பு ஏசி அறையை தேனிலவு அறை போல மாற்றியதும், ஜால்னாவை சேர்ந்த ஒரு தம்பதியினர் அந்த பெட்டியில் பயணம் மேற்கொண்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, பணியில் அலட்சியமாக இருந்ததாக தலைமை டிக்கெட் பரிசோதகர் கிரிஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த முறைகேடு குறித்து விசாரிக்கவும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


