கோலாலம்பூர்:
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இங்குள்ள பெர்டானா புத்ராவில் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுலுடன் (Anutin Charnvirakul) இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கியச் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதமரை, பிரதமர் அன்வார் இப்ராஹிம் நெகிழ்ச்சியோடு வரவேற்றார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடினர்.
குறிப்பாக, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளும் இணைந்து வர்த்தகம், முதலீடு, எல்லைத் தொடர்பு, பாதுகாப்பு, வேளாண்மை, சுற்றுலா மற்றும் கல்வி ஆகிய முக்கியத் துறைகளில் முழு கவனம் செலுத்தி, திட்டங்களைச் செயல்படுத்த தீவிர முனைப்பு காட்டி வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டில், உலகளவில் மலேசியாவின் 6-ஆவது பெரிய வர்த்தகப் பங்காளராகவும், ஆசியான் (ASEAN) உறுப்பு நாடுகளில் 2-ஆவது பெரிய பங்காளராகவும் தாய்லாந்து திகழ்ந்தது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் RM118.57 பில்லியனை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில், இந்த உயர்மட்டச் சந்திப்பு இரு நாட்டு உறவுகளையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.



