Last Updated:
உரக்கடைகளில் வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) விஜயகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உரங்களின் விற்பனை மற்றும் விநியோக முறைகளை கண்காணிக்கும் வகையில், வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) விஜயகுமார் தலைமையில் மாவட்டத்தின் பல்வேறு உர விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, உர விற்பனை விதிகளை மீறும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை உர விற்பனையாளர்கள், மானிய விலையில் வழங்கப்படும் உரங்களை பிற மாவட்டங்களுக்கு கடத்தவோ அல்லது அனுமதியின்றி பிற மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், உர மூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக் கூடாது என்றும், கடையின் முன்பாக உர இருப்பு மற்றும் விலை விவரங்களை விவசாயிகள் எளிதில் அறியும் வகையில் தினமும் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அனைத்து உர விற்பனைகளும் கட்டாயம் பி.ஓ.எஸ். (POS) கருவி மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
உரங்களுடன் தேவையில்லாத நுண்ணூட்டச்சத்துகள், உயிர் உரங்கள் உள்ளிட்ட பிற பொருட்களை கட்டாயப்படுத்தி இணைத்து விற்பனை செய்வது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இனி இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேவையெனில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. தரமற்ற அல்லது போலி உரங்களை விற்பனை செய்வதும் சட்டவிரோதமானது என்பதால், அவ்வாறு செயல்படுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட உர ஆய்வாளர்கள் தொடர்ந்து திடீர் ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்றும், உரங்களை பதுக்கி வைத்தல், மானிய உரங்களை கடத்துதல் அல்லது விவசாயம் அல்லாத தேவைகளுக்காக மடைமாற்றுதல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது உரிமம் ரத்து செய்வதுடன், சட்டப்படி கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் கடுமையாக எச்சரித்துள்ளார். இதன்மூலம், மானிய உரங்கள் உண்மையான விவசாயிகளுக்கு உரிய முறையில் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


