Business
oi-Vigneshkumar
சென்னை: முதலீடுகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு சீசனிலும் நமக்கு ஒவ்வொரு முதலீடுகள் அதிக லாபம் கொடுக்கும். சில ஆண்டுகள் பங்குச்சந்தை, சில காலம் கடன் பத்திரம், சில காலம் தங்கம் என மாறிக் கொண்டே இருக்கும். அப்படி கடந்த சில ஆண்டுகளாகவே லாபத்தை அள்ளி கொடுத்து வந்த தங்கம் இப்போது சரிய தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் நாம் ஸ்மார்ட்டாக முதலீடு செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகப் பார்க்கலாம்.
தங்கத்தை பொறுத்தவரை கொரோனாவுக்கு பிந்தைய ஆண்டுகள் அது வேற லெவலில் பறந்தது. அதிலும் குறிப்பாகக் கடந்த நான்கு ஆண்டுகளில் தங்கம் முதலீட்டாளர்களுக்கு அபாரமான வருமானத்தைக் கொடுத்தது. இதனால் பொதுமக்கள் பலரும் தங்கத்தை நோக்கிச் சென்றனர். செல்வத்தை அள்ளி கொடுக்கும் ஒன்றாகவே தங்கம் இருந்துள்ளது.

தங்கம் விலை
சர்வதேச சந்தையில் 2022 இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸ் சுமார் 1,620 டாலராக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அது அதிகபட்சமாக 5,595 டாலர் வரை உயர்ந்தது. நமது நாட்டிலும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5,000-5,200 என்ற நிலையிலிருந்து ரூ.17 ஆயிரம் வரை போனது. இந்தியாவில் ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச விலை உயர்வு ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இப்போது தங்கம் சற்று சரிந்து 24 கேரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ.14,000 என்ற ரேஞ்சில் வர்த்தகமாகி வருகிறது. இதனால் தற்போது மேலும் தங்கத்தை வாங்கலாமா, கையில் இருக்கும் தங்கத்தை விற்று லாபம் பார்க்கலாமா என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
என்ன செய்ய வேண்டும்!
இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், “தங்கத்தின் விலை உயர்ந்துவிட்டதால் உடனடியாக விற்க வேண்டும் அல்லது மேலும் வாங்க வேண்டும் என்ற முடிவுக்கு வரக்கூடாது. அதற்குப் பதிலாக, ஒருவரின் போர்ட்ஃபோலியோவில் தங்கத்தின் பங்கு எவ்வளவு உள்ளது என்பதை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதாரணமாக போர்ட்ஃபோலியோவில் தங்கத்திற்கு 10 சதவீதம் மட்டுமே தங்கம் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், விலை உயர்வால் அது 20 சதவீதமாக உயர்ந்திருந்தால், ஒரு பகுதியை விற்று லாபத்தை புக் செய்து, மீண்டும் அதை 10%ஆக கொண்டு வந்து சமநிலைப்படுத்துவதே சரியானதாக இருக்கும். ஏனெனில் தங்கம் என்பது அதிக லாபத்தைத் தரும் முதலீடு இல்லை. பொருளாதார நெருக்கடிக் காலங்களில் செல்வத்தைப் பாதுகாக்கும் சொத்தாகவே பார்க்கப்பட வேண்டும்” என்கிறார்கள்.
தங்கம் பேட்டர்ன்
தங்கம் விலை கடந்து வந்த பாதையைப் பார்த்தால் நமக்கு ஒரு பேர்ட்டன் தெளிவாகப் புரியும். அதாவது தங்கத்தின் விலை தொடர்ந்து ஒரே திசையில் உயர்ந்ததே இல்லை. 2011 மற்றும் 2020க்கு பிறகும் தங்கம் கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது. தற்போதும் கூட ரூ.1.72 லட்சம் என்ற உச்சத்திலிருந்து ரூ.1.41 லட்சமாக, அதாவது சுமார் 18 சதவீதம் விலை குறைந்துள்ளது. இதனால் அடுத்த 12 முதல் 18 மாதங்கள் வரை தங்கத்தின் விலை பெரிய அளவில் உயராது. இதே ரேஞ்சில் இருக்கும். அல்லது மேலும் கொஞ்சம் சரியும்.
முதலீடு செய்வோரை பொறுத்தவரை உங்களுக்கு அதிக லாபம் வேண்டும்.. ரிஸ்க் எடுப்பதில் பிரச்சினை இல்லை என்றால் உங்கள் மொத்த முதலீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே தங்கத்தை வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்கள் 10 முதல் 15 சதவீதம் வரை வைத்திருக்கலாம். அதற்கு மேல் தங்கத்தில் முதலீடு செய்வது உங்கள் லாபத்தை பாதிக்கக்கூடும்.
எப்படி முதலீடு செய்யலாம்?
தங்கத்தை முதலீடு செய்ய பல வழிகள் உள்ளன. அதில் நேரடியாக கடைக்கு சென்று வாங்குவதையே பலரும் விரும்புவார்கள். அது நல்லதும் கூட. இருப்பினும், பெரிய தொகை போட வேண்டும்.. செய்கூலி, சேதாரம் தனியாக இருப்பது ஒரு சிக்கல். அடுத்து கோல்டு ETFகள் சிறந்த தேர்வாக கருதப்படுகின்றன. இவற்றை எளிதாக வாங்கவும் விற்கவும் முடியும். பாதுகாப்பாகவும் இருக்கும். டிஜிட்டல் கோல்ட்டை பொறுத்தவரை அது செபி அல்லது ரிசர்வ் வங்கியின் கீழ் வராது என்பதால் கொஞ்சம் ரிஸ்க் இருக்கவே செய்கிறது.
முதலீடுகளை பொறுத்தவரை நீண்ட காலத்தில் பங்குச் சந்தை முதலீடுகளே அதிக செல்வத்தை உருவாக்கும் என்றாலும் பணவீக்கம், போர்கள், சர்வதேச நாணய மதிப்பு சரிவு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை போன்ற சூழல்களில் தங்கம் அதிக லாபத்தை கொடுக்கவே செய்கிறது.



