Last Updated:
நீட் தேர்வு விண்ணப்பத் தொகையைத் திரும்பப் பெற தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத அல்லது தவறாகப் பதிவிட்ட விண்ணப்பதாரர்கள் புதுப்பிக்க, தேசிய தேர்வு முகமை கால அவகாசம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீட் மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஏற்கனவே செலுத்திய கட்டணம் மாணவர்களுக்கு திரும்ப வழங்கப்படும் என்றும், அதற்காக விண்ணப்பதாரர்கள் மே 27 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பித்து வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இது நேற்றோடு நிறைவடைய இருந்த நிலையில், தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று வங்கி கணக்குகளை பதிவேற்றவும், திருத்தம் செய்வதற்கும் தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தங்களது வங்கி விவரங்களை சமர்ப்பிக்காத அல்லது தவறாகப் பதிவிட்ட விண்ணப்பதாரர்கள் வரும் 14ஆம் தேதி இரவு வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11.50 மணியோடு அவகாசம் முடிவடைந்ததாக சொல்லப்பட்டிருந்த நிலையில், வரும் 14ஆம் தேதி இரவு வரை அது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கி கணக்கு விவரங்களை சரியாக சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு, கட்டணத் தொகையை திரும்ப வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுவரை 8,29,510 விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களது வங்கி கணக்கு விவரங்களைச் புதுப்பித்துள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
Jul 08, 2026 11:36 AM IST


