மூண்டது போர்: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான், அமெரிக்கா பரஸ்பர தாக்குதல்..!! அப்போ பெட்ரோல் விலை?
உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் பரஸ்பர தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் போர் முடிந்தது இனி நிம்மதி என மக்கள் எண்ணுவதற்குள் இருநாடுகளும் மீண்டும் போரை தொடங்கி இருப்பது கோடிக்கணக்கான மக்களை அதிர்ச்சியை அடைய வைத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது. மேலும், ஈரானின் எண்ணெய் விற்பனைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியையும் அமெரிக்க அரசு உடனடியாக ரத்து செய்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற மூன்று வர்த்தக கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் கத்தார் நாட்டைச் சேர்ந்த இயற்கை எரிவாயு டேங்கர் கப்பலான அல்-ரேகையத் மற்றும் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலான வேத்யான் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக அமெரிக்கா சாடியுள்ளது.
இந்த தாக்குதல் சர்வதேச கடல் போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது மற்றும் நியாயமற்றது என கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா இதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணை ஏவுதளங்கள், கடலோர கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் சிரிக் மற்றும் பண்டார் அப்பாஸ் ஆகிய பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய வழங்கப்பட்டிருந்த பொது உரிமம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
ஈரானின் நடவடிக்கைகள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று கூறியுள்ள அமெரிக்கா, இந்த விற்பனை பரிவர்த்தனைகளை ஜூலை 17-க்குள் முடித்துக்கொள்ளுமாறு காலக்கெடு விதித்துள்ளது. இதனால் ஈரானின் பொருளாதாரத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானில் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் நடந்து வருகின்றன. டெஹ்ரானில் தொடங்கிய இறுதி சடங்கு ஊர்வலங்கள் மற்றும் பிரார்த்தனைகளின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமெரிக்காவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி 3 மாதங்களாக ஈரான் போர் நீடித்தது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல், எல்பிஜி கேஸ் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்தன, இதனால் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்தன.
இந்த சூழலில் தான் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இந்த புதிய தாக்குதல்கள் அந்த ஒப்பந்தத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் மோதலை தொடங்கியதை அடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தான் வழிவகுக்கும். ஒரு வேளை மீண்டும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை நிறுத்தி தாக்குதலை தீவிரமாக கையில் எடுத்தால் உலக பொருளாதாரத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

